என் மலர்
செய்திகள்

ஊரப்பாக்கம் ரவுடி கொலையில் நண்பர்கள் 3 பேர் கைது
செங்கல்பட்டு:
வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம், அறிஞர் அண்ணா காலனியை சேர்ந்தவர் வீரா என்கிற வீரபாண்டியன் (வயது 21) பிரபல ரவுடி. இவர் மீது பல்வேறு வழக்குகள் கூடுவாஞ்சேரி, ஓட்டேரி போலீஸ் நிலையங்களில் உள்ளன.
நேற்று முன்தினம்இரவு வீரா, ஊரப்பாக்கம் பெட்ரோல் பங்க் அருகே உள்ள டீக்கடையில் நின்றார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் திடீரென வீராவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை சரமாரியாக வெட்டினர்.
இதில் பலத்த காயம் அடைந்த வீரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் விசாரணை நடத்தினார்.
இந்த கொலை தொடர்பாக வீராவின் நண்பர்கள் தீபக்ராஜ், அமர், நாகராஜ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கடந்த மாதம் வீரா, தாம்பரத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் ரூ. 1 லட்சம் வழிப்பறி செய்து இருந்தார்.
இந்த வழக்கில் கைதான அவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தான் சிறையில் இருந்து வெளியே வந்து உள்ளார். அதற்குள் அவரை தீர்த்துக்கட்டி விட்டனர்.






