search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கல்வீசி தாக்கியதில் அரசு பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்துள்ளதை காணலாம்
    X
    கல்வீசி தாக்கியதில் அரசு பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்துள்ளதை காணலாம்

    அரியலூர் அருகே பள்ளி மாணவர்கள் மறியல் - அரசு பஸ் கல்வீசி உடைப்பு

    அரியலூர் அருகே அரசு பஸ் மீது மாணவர்கள் கற்களை வீசியதால் கண்ணாடி உடைந்தது. மேலும் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சிலால் கிராமம் உள்ளது. இப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் பலர் கும்பகோணத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். தினமும் ஜெயங்கொண்டத்தில் இருந்து சிலால் கிராமம் வழியாக கும்பகோணத்திற்கு செல்லும் அரசு பஸ்சில் செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் அரசு பஸ் சிலால் கிராமத்திற்கு சரியான நேரத்திற்கு வராததால் மாணவர்கள் பலர் பள்ளி, கல்லூரிகளுக்கு சரியான நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் அரசு பஸ் டிரைவர், சிலால் கிராமத்தில் பஸ்சை நிறுத்தாமல் செல்வதாக மாணவர்கள் புகார் தெரிவித்ததுடன், இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர். இருப்பினும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இன்று காலை ஜெயங்கொண்டத்தில் இருந்து கும்பகோணத்திற்கு அரசு பஸ் புறப்பட்டது. சிலால் கிராமத்திற்கு வரும்போது, டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிலர் கற்களை எடுத்து பஸ் மீது வீசினர். இதில் பஸ்சின் பின்புற கண்ணாடிகள் உடைந்தது.

    மேலும் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு தா. பழுர் போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சுமூக முடிவு ஏற்பட்டதையடுத்து மாணவர்கள் மறியலை கைவிட்டனர். மேலும் பஸ் மீது கல் வீசிய மாணவர்கள் தப்பியோடி விட்டனர்.

    அவர்கள் யாரென்று போலீசார் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


    Next Story
    ×