
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த தேரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 45). இவர் கோவையை அடுத்த ஒரு தனியார் கம்பெனியில் வெல்டராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில நாட்களாக தண்டபாணி மன வேதனையுடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 10-ம் தேதி தண்டபாணி பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். அதன் பின்னர் அவர் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர்.
பவானிசாகர் தேசிய மீன் பண்ணை அருகே உள்ள இடத்தில் தண்டபாணி மறுநாள் விஷம் அருந்திய நிலையில் மயங்கி கிடந்தார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் பவானிசாகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்டபாணியை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி தண்டபாணி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.