search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    தேவகோட்டை அருகே மூதாட்டியை கொன்று நகை-பணம் கொள்ளை

    தேவகோட்டை அருகே மூதாட்டியை கொன்று நகை-பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    தேவகோட்டை:

    தேவகோட்டை அருகே உள்ள பூங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சாத்தையா. இவரது மனைவி தில்லையம்மாள் (வயது 60). இவர்களது மகன் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    சமீபத்தில் கண் பாதிப்புக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட சாத்தையா ஓசூரில் உள்ள மகன் வீட்டுக்கு சென்று விட்டார்.

    தில்லையம்மாள் மட்டும் வீட்டில் தனியே இருந்தார். இதை அறிந்த யாரோ மர்ம மனிதர்கள் நேற்று நள்ளிரவு வீட்டுக்குள் புகுந்து வீட்டில் இருந்த நகை- பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர்.

    தில்லையம்மாள் சத்தம் போடவே, கொள்ளையர்கள் ஆத்திரமடைந்து அவரை வெட்டிக் கொன்றனர். பின்னர் அவர் அணிந்திருந்த கம்மல், தங்கச்சங்கிலி மற்றும் வீட்டில் இருந்த பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.

    இன்று காலை வெகு நேரமாகியும் ஆள் நடமாட்டம் இல்லாததால் அக்கம், பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர்.

    அப்போது தான் தில்லையம்மாளை கொலை செய்து மர்ம மனிதர்கள் நகை- பணத்தை கொள்ளையடித்துச் சென்ற விவரம் தெரியவந்தது.

    சம்பவம் குறித்து ஆராவயல் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அந்தோணி செல்லத்துரை மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    தில்லையம்மாள் கொலை குறித்து ஓசூரில் உள்ள சாத்தையாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வந்த பின்னர் தான் கொள்ளை போன நகை- பணத்தின் மதிப்பு தெரிய வரும்.

    Next Story
    ×