என் மலர்
செய்திகள்

பணத்தகராறில் தாக்கப்பட்டதால் தற்கொலை: வாலிபர் பிணத்துடன் சாலை மறியல்
வேலூர்:
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த முடினாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நித்தியானந்தம். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் நித்தியானந்தம் தாக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து நித்தியானந்தம் கே.வி.குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த நித்தியானந்தம் நேற்று இரவு அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இன்று காலை நித்தியானந்தம் பிணமாக தொங்கியதை கண்டு அவரது உறவினர்கள் கதறி அழுதனர். அவரது பிணத்தை விரிஞ்சிபுரம், கே.வி.குப்பம் மெயின் ரோட்டில் வைத்து 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் செய்தனர்.
போலீசாரை கண்டித்தும், நித்தியானந்தத்தை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரியும் கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த கே.வி.குப்பம் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






