search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    நாகையில் மாட்டுக்கறி சாப்பிட்ட விவகாரம்: தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 75 பேர் கைது

    நாகையில் மாட்டுக்கறி சாப்பிட்ட விவகாரத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 75 பேரை போலீசார் கைது செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே மாட்டு இறைச்சி சாப்பிட்டது தொடர்பாக இரு தரப்பினர் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலரை கைது செய்தனர். இதை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. சிக்கல் பகுதியில் தற்காலிக புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது.

    இந்த நிலையில் முஸ்லிம் இளைஞர்களை போலீசார் கைது செய்ததாக கூறி நாகை புதிய பஸ் நிலையம் அருகே அவுரி திடலில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்க அனுமதி கேட்கப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.

    இதனால் நேற்று துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராதாகிருஷ்ணன், சுப்பிரமணியன் உள்பட ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் மாலை 6 மணி அளவில் நாகை புதிய பஸ் நிலைய பகுதியில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் திரண்டு போலீசாரை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர். அதனை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்து சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதால் போலீசார் அவர்களை குண்டுகட்டாக தூக்கி வேனில் ஏற்றினர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதை தொடர்ந்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 15 பெண்கள் உள்பட 75 பேரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×