search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
    X
    சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

    விருத்தாசலம் அருகே போலீசாரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

    விருத்தாசலம்- சேந்த நாடு சாலையில் ஆலடி போலீசாரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அருகே பாலக்கொல்லை கிராமத்தில் மணல் கடத்தலை தடுப்பதற்காக ஆலடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த நீலகண்டன் என்பவர் மணல் கடத்துவதாக கூறி அவரை போலீசார் பிடிப்பதற்காக துரத்தினர். ஆனால் நீலகண்டன் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடினார்.

    அப்போது அப்பகுதியில் இருந்த முட்புதர்களில் விழுந்தார். அதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை அப்பகுதி மக்கள் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இது குறித்து அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விருத்தாசலம்- சேந்த நாடு சாலையில் திரண்டனர். அவர்கள் ஆலடி போலீசாரை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த தகவல் அறிந்து வந்த ஆலடி போலீசார் மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்களை சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது அப்பாவி இளைஞர்கள் மீது போலீசார் பொய் வழக்கு பதிவு செய்வதாக கூறி கோ‌ஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    போலீசாரின் சமாதானத்தை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×