என் மலர்
செய்திகள்

வாணியம்பாடி அருகே கோவில் பூட்டை உடைத்து அம்மன் தாலி திருட்டு
வாணியம்பாடி:
வாணியம் பாடி அருகேயுள்ள ஈச்சங்காடு கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. தற்போது ஆடி மாதம் என்பதால் வெள்ளிக் கிழமை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன.
இந்த நிலையில் நேற்றிரவு மர்ம கும்பல் ஒன்று கோவில் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அம்மன் கழுத்தில் இருந்த 4 பவுன் தாலி சரடு மற்றும் கோவில் வளாகத்தில் இருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை எடுத்து சென்றனர்.
உண்டியலை கோவில் அருகில் உள்ள நிலத்தில் வீசி சென்றனர். இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் கோவில் கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஊர்பொதுமக்கள் கோவில் அருகே திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து வாணியம்பாடி தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலம் கைரேகை நிபுணர்கள் வந்து கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடி பகுதியில் வீடுகளின் பூட்டை உடைத்து அடிக்கடி கொள்ளை சம்பவம் நடந்து வந்த நிலையில் கோவில் பூட்டை உடைத்து அம்மன் தாலி திருட்டு போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொள்ளை சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.






