search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
    X

    குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

    கறம்பக்குடி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள மழையூர் ஊராட்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. நீர்மட்டம் குறைந்ததன் காரணமாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் தண்ணீர் ஏற்ற முடியவில்லை. 2 நாட்களுக்கு ஒருமுறை வினியோகம் செய்யப்படும் காவிரி நீரும் கடந்த 3 மாதமாக சரியாக வினியோகம் செய்யப்படவில்லை.

    இதனால் குடிநீரின்றி தவித்த பொதுமக்கள் 2, 3 கிலோ மீட்டர் நடந்து சென்று விவசாய மோட்டார்களில் தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனர். அந்த மோட்டார்களும் தற்போது செயல்படவில்லை. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த மழையூர் பகுதி பொதுமக்கள் நேற்று மழையூர் கடைவீதி பகுதியில் கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் மழையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காவிரி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக் கப்பட்டது.

    Next Story
    ×