என் மலர்
செய்திகள்

ஜோலார்பேட்டை அருகே குடிநீர் கேட்டு மறியல்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பஞ்சாயத்து நிர்வாகம் சார்பாக குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டாக குடிநீர் சரிவர வழங்கவில்லை.
இதனால் பல முறை பஞ்சாயத்து நிர்வாகத்திடமும் ஊராட்சி அலுவலக அதிகாரிகளிடமும் மனு அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்க வில்லை.
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வழங்குவது முற்றிலுமாக நிறுத்தி விட்டனர். குடிநீர் கிடைக்காமல் அவதி அடைந்த அப்பகுதி மக்கள் இன்று காலை காலி குடங்களுடன் திருப்பத்தூர் புதுப்பேட்டை மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவர்த்ததை நடத்தி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.