search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் இருந்து திருச்சிக்கு குடிபோதையில் அரசு பஸ் ஓட்டிய டிரைவர் ‘சஸ்பெண்டு’
    X

    கோவையில் இருந்து திருச்சிக்கு குடிபோதையில் அரசு பஸ் ஓட்டிய டிரைவர் ‘சஸ்பெண்டு’

    கோவையில் இருந்து திருச்சிக்கு குடிபோதையில் அரசு பஸ்சை ஓட்டிய டிரைவர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
    சிங்காநல்லூர்:

    கோவை சிங்காநல்லூரில் இருந்து நேற்றுமுன்தினம் இரவு திருச்சிக்கு சென்ற அரசு பஸ்சில் 40 பயணிகள் இருந்தனர்.

    பஸ் நிலையத்தில் புறப்பட்டதில் இருந்தே டிரைவர் பஸ்சை தாறுமாறாக ஓட்டினார். இதனால் பயணிகள் பீதியுடன் பயணம் செய்தனர்.

    இந்நிலையில் பஸ் ஒண்டிப்புதூர் மேம்பாலத்தின் மீது தாறுமாறாக சென்றபோது பாலத்தின் சுவர் மீது உரசியதால் பயணிகள் அலறி சத்தம் போட்டனர். பின்னர் இருகூர் பிரிவு அருகே சென்றபோது பஸ்சை பயணிகள் நிறுத்தி டிரைவரை சிறைபிடித்தனர்.

    இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்ற விசாரணை நடத்தினர்.

    அப்போது பஸ்சை ஓட்டியது கரூர் மாவட்டம் புலியூரை சேர்ந்த சுப்பிரமணியம்(42) என்பதும், அவர் குடிபோதையில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து பஸ்சில் பயணித்த பயணிகள் மாற்று பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் டிரைவர் சுப்பிரமணியம் மீது மோட்டார் வாகன சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக காங்கேயம் பஸ் டெப்போ அதிகாரிகளும் விசாரணை நடத்தி உயரதிகாரிகளுக்கு அறிக்கை அளித்தனர்.

    இதனடிப்படையில் டிரைவர் சுப்பிரமணியத்தை முதற்கட்டமாக சஸ்பெண்டு செய்து திருப்பூர் கோட்ட மேலாண் இயக்குனர் முருகேசன் உத்தரவிட்டுள்ளார். மேலும், சுப்பிரமணியம் மீது ஏற்கனவே இதுபோன்ற புகார்கள் உள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொடர்ச்சியான புகார்கள் இருக்கும்பட்சத்தில் டிரைவர் பணிநீக்கம் செய்யப்படுவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×