search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திட்டமிட்டபடி நாளை பிளஸ்2 தேர்வு முடிவு வெளியீடு- அமைச்சர் செங்கோட்டையன்
    X

    திட்டமிட்டபடி நாளை பிளஸ்2 தேர்வு முடிவு வெளியீடு- அமைச்சர் செங்கோட்டையன்

    பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை காலை சரியாக 9.30 மணிக்கு திட்டமிட்டபடி வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். #Plus2Result #TNMinister #Sengottaiyan
    கோபி:

    கோபி அருகேயுள்ள குள்ளம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளிக் கூடத்தில் அமைச்சர் செங்கோட்டையன் ஓட்டு போட்டார். வாக்களிப்பதற்கு முன்பாக அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் பல சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பொங்கலன்று பரிசாக ரூ.1,000 கொடுத்தது போல தேர்தல் முடிந்த பிறகு வறுமைக்கோட்டிற்கு கீழ்உள்ளவர்களுக்கு ரூ.2,000 வழங்கப்படும்.

    வீட்டு வரி, குடிநீர் வரி ஆகியவற்றை குறைக்கவும், கேபிள் டி.வி. கட்டணமும் குறைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறியுள்ளார். பாண்டிச்சேரி உள்பட 39 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். அதில் திருப்பூர் பாராளுமன்ற தொகுதியானது அதிக வாக்குகள் பெற்ற தொகுதியாக இருக்கும்.



    நாளை 19 ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் காலை சரியாக 9-30 மணிக்கு திட்டமிட்டபடி வெளியிடப்படும். மாணவ, மாணவிகள் எஸ்எம்எஸ், ஆன்லைன் மூலமாகவும் தங்களது தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.

    பிளஸ் 2 தேர்வில் அனைத்து மாணவர்களும் நல்ல முறையில் வெற்றி பெற்று மேல்படிப்பிற்குச் செல்லவும் வாழத்துக்களை தெரிவிக்கிறேன். தோல்வியடைந்த மாணவர்கள் சோர்வும், மனஅழுத்தமும் இல்லாமலும், துவண்டு விடாமலும் ஜூன் மாதத்தில் நடைபெற உள்ள உடனடி தேர்வை எழுதி வெற்றி பெற்று இதே ஆண்டில் கல்லூரிக்குச் செல்லலாம்.

    இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் முதன் முதலாக கல்வியாண்டின் துவக்கத்திலேயே மாணவ, மாணவிகள் பிளஸ்2, பிளஸ்1, 10 ம் வகுப்பு ஆகிய பொதுத் தேர்வுகளுக்கான தேதிகளும், தேர்வு முடிவுகளுக்கான தேதிகளும் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.

    புதிய பாடத்திட்டங்களை செயல்படுத்த ஆசிரிய, ஆசிரியைகளுக்கு விரைவில் பயிற்சி அளிக்கப்படும். அரசு பள்ளிகளில் ஜூன் மாதம் முதல் எல்.கே.ஜி. யு.கே.ஜி. வகுப்புகள் துவங்கப்பட உள்ளது. 13 லட்சத்து 35 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு ஜூன் மாதம் மடிகணினி வழங்கப்படும்.

    கோடை விடுமுறையில் தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது. இதுபற்றி தகவல் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    நீட் தேர்வை பொருத்த வரை தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசிடம் தேவையில்லை என்று வலியுறுத்தி வருகிறது. ஆனால், திமுக, மற்றும் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. இந்த ஆண்டு நீட் தேர்விற்கு 10 கல்லூரிகளில் 5 ஆயிரம் பேருக்கு பயிற்சியளிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வேலூர் பாராளுமன்றத் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து கேட்டதற்கு தேர்தல் கமி‌ஷனும், உயர்நீதிமன்றமும் இதுபற்றி முடிவெடுத்துள்ளது என்றார். #Plus2Result #TNMinister #Sengottaiyan
    Next Story
    ×