search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாணவர்
    X

    தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாணவர்

    பாராளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி பள்ளி மாணவர் தர்ஷன் ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். #Election2019 #Vote
    கோவை:

    கோவை கணபதியை சேர்ந்த சக்திவேல், அனிதா தம்பதியின் மகன் தர்ஷன் (வயது 8). இவர் ஸ்டேன்ஸ் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இச்சிறுவனுக்கு ஓவியத்தில் மிகுந்த ஈடுபாடு உள்ளது. இந்த நிலையில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி ஓவியம் வரைய திட்டமிட்டார். இதையடுத்து தனது தந்தையின் உதவியுடன் கடந்த 7-ந் தேதி தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஓவியம் வரைய தொடங்கி 14-ந் தேதி முடித்தார். இதில் அவர் மொத்தம் 1,050 ஓவியங்கள் வரைந்தார்.

    இந்த ஓவியத்தில் விரலில் அழியாத மை வைப்பது போன்றும், அதை சுற்றிலும் தேசிய கொடியில் உள்ள நிறங்களும் இடம்பெற்றுள்ளன. இதுதவிர ஓவியங்களில் வாக்களிக்க தயார், உனது ஓட்டு, உனது உரிமை, வாக்காளர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன், நல்ல இந்தியா அமைய வாக்களியுங்கள், உங்கள் விரலின் வலிமை உள்ளிட்ட வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இதையடுத்து சிறுவன் தர்ஷன் தனது ஓவியங்களுடன் கலெக்டர் ராஜாமணியை பார்த்தார். அப்போது கலெக்டர் சிறுவனின் திறமையை பாராட்டினார். இதுகுறித்து சிறுவன் தர்ஷன் கூறியதாவது:- எனக்கு ஓவியம் வரைவதில் மிகுந்த ஈடுபாடு உண்டு. தற்போது நடைபெறும் தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஓவியங்கள் 1,050 வரைந்து உள்ளேன். இதற்கு 8 நாட்கள் ஆனது. வலிமையான நாடு அமைய அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
    Next Story
    ×