search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒகேனக்கல்லில் புகுந்த சிறுத்தை குட்டியை பிடிக்க வனத்துறையினர் ஏற்பாடு
    X

    ஒகேனக்கல்லில் புகுந்த சிறுத்தை குட்டியை பிடிக்க வனத்துறையினர் ஏற்பாடு

    ஒகேனக்கல்லில் புகுந்த சிறுத்தை குட்டியை உயிருடன் பிடிக்க முடிவு செய்த வனத்துறையினர் சிறுத்தை சென்ற பகுதியில் வலைகளை கட்டி பிடிக்க முயன்று வருகின்றனர்.
    தர்மபுரி:

    ஒகேனக்கல் வனத்தையொட்டி ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் நீரேற்று நிலையம் உள்ளது.

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த நிலையத்தில் ஊழியர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் இருப்பார்கள்.

    இங்கு நேற்று முன்தினம் இரவு சிறுத்தை ஒன்று புகுந்தது. இருள் சூழ்ந்து இருந்ததால் அங்கிருந்த ஊழியர்கள் நாய் என நினைத்து அதை விரட்டியபோது அது அப்பகுதியில் இருந்த வெளிச்சத்தின் வழியாக சீறிப்பாய்ந்து ஓடியது.

    அப்போது தான் அது சிறுத்தை என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்த ஊழியர்கள், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து அங்கு வந்த ஒகேனக்கல் வன அலுவலர் கேசவன் தலைமையிலான வனத்துறையினர், நீரேற்று நிலையத்தின் உள்ளே சிறுத்தையை தேடினர். ஆனால் சிறுத்தை வனத்துறையினரின் தேடுதலில் சிக்கவில்லை.

    இதனால் சிறுத்தையை உயிருடன் பிடிக்க முடிவு செய்த வனத்துறையினர் சிறுத்தை சென்ற பகுதியில் வலைகளை கட்டி பிடிக்க முயன்று வருகின்றனர்.

    நீரேற்று நிலையத்தில் மழைநீர் வெளியேறும் வகையில் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    அந்த பகுதியில் புதர்கள் மண்டி கிடக்கிறது. எனவே சிறுத்தை அக்குழாயில் பதுங்கி இருக்க வாய்ப்பு உள்ளது. சிறுத்தையை பிடிக்க வலைகள் கட்டப்பட்டுள்ளன. சிறுத்தையை பார்த்த ஊழியர்கள் கூறிய தகவல் அடிப்படையில் சுமார் 10 கிலோ எடை கொண்ட குட்டி சிறுத்தையாக இருக்கலாம்.

    ஒகேனக்கல் பகுதியில் தற்போது நிலவும் கடும் வறட்சியால் தண்ணீர் மற்றும் உணவு தேடி வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விடுகின்றன. இதே போல் தான் சிறுத்தையும் வந்திருக்கலாம். சிறுத்தை ஊருக்குள் புகுந்து விடாமல் இருக்க கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளோம்.

    சிறுத்தை பிடிபட்ட பின்னர் அதை அடர்ந்த காட்டு பகுதியில் கொண்டு போய் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×