search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அய்யலூர் அருகே குடிநீருக்காக போராட்டத்தில் குதித்த கிராம மக்கள்
    X

    அய்யலூர் அருகே குடிநீருக்காக போராட்டத்தில் குதித்த கிராம மக்கள்

    அய்யலூர் அருகே குடிநீருக்காக போராட்டத்தில் குதித்த கிராம மக்களை அதிகாரிகள் சமரசம் செய்தனர்.

    வடமதுரை:

    அய்யலூர் அருகே மோர்பட்டி, கோப்பம்பட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலமும், ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல் நிலை தொட்டியில் தேக்கியும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளதால் குடிநீர் சீராக வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இதனால் தொடர்ந்து குடிநீர் இன்றி பொதுமக்கள் தவித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வடமதுரை யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் அவர்களை சமரசம் செய்தனர்.

    தற்போது மோர்பட்டி - சித்துவார்பட்டி சாலையில் பணிகள் நடைபெற்று வருகிறது. பணியின் போது குடிநீர் குழாயை உடைத்ததால் கோப்பம்பட்டி பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை.

    இது குறித்து பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காலிக்குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட தயாரானார்கள். சம்பவம் குறித்து அறிந்ததும் அதிகாரிகள் விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். டாக்டர் பரமசிவம் எம்.எல்.ஏ.வுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் பேசி குடிநீர் குழாயை விரைவில் சீரமைக்கப்படும் என உறுதியளித்ததால் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    Next Story
    ×