search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடைக்கானலில் அனுமதியற்ற 258 கட்டிடங்களை சீல் வைக்க முடிவு - போலீசார் குவிப்பு
    X

    கொடைக்கானலில் அனுமதியற்ற 258 கட்டிடங்களை சீல் வைக்க முடிவு - போலீசார் குவிப்பு

    கொடைக்கானலில் அனுமதியற்ற 258 கட்டிடங்களை சீல் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதால் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் அனுமதியற்ற மற்றும் வீதி மீறிய 1400-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும், இது குறித்து மார்ச் 11-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்மாறும் மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது.

    இதனையடுத்து கொடைக்கானல் நகராட்சி 1415 கட்டிடங்களை பட்டியலிட்டு நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது. கொடைக்கானலில் மார்ச் 6-ந் தேதிக்குள் புதிய மாஸ்டர் பிளான் அமல்படுத்தப்பட்டு விதிமீறிய கட்டிடங்கள் நெறிமுறைப்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

    தமிழக நகர, ஊரமைப்பு, வீட்டுவசதித்துறை முதன்மை செயலாளர் கிருஷ்ணன், இயக்குனர் ராஜேஷ்லக்காணி உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்து வரும் 6-ந் தேதிக்குள் புதிய மாஸ்டர் பிளான் அமல்படுத்தப்படும். எனினும் இதற்கும் கோர்ட்டு நடவடிக்கைக்கும் எவ்வித சம்மந்தமும் கிடையாது என கூறினர்.

    இதனையடுத்து கோர்ட்டு நடவடிக்கையை தமிழக அரசு தடுத்து நிறுத்தகோரி கொடைக்கானல் நகர் முழுவதும் ஓட்டல்கள், விடுதிகளில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டு போராட்டம் நடந்தது.

    நேற்று விதி மீறிய கட்டிடங்கள் மீது சீல் வைக்கப்போவதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து கொடைக்கானல் நகராட்சி அலுவலகத்தில் கட்டிட உரிமையாளர்கள், வியாபாரிகள் குவிந்தனர். அவர்கள் ஆணையர் முருகேசனை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.

    இது குறித்து பதில் அளித்த ஆணையர் உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய முடிவு செய்யப்படும் என தெரிவித்தார். இதனையடுத்து வியாபாரிகள் நீண்ட நேரம் நகராட்சி அலுவலகத்தில் காத்திருந்து பின்னர் வெளியேறினர்.

    மதுரை உயர்நீதிமன்ற கிளையில் கொடைக்கானலை சேர்ந்த சிலர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் நேற்று புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி விதிமுறை மீறிய, அனுமதிக்கு மாறாக கட்டப்பட்ட 258 வணிக கட்டிடங்களை பூட்டி சீல் வைக்க வேண்டும். இன்று முதல் இப்பணி தொடங்க வேண்டும். பள்ளி வளாகங்கள், வழிபாட்டு தலங்கள், சிறு வணிக வளாகங்கள் போன்ற கட்டிடங்களை மறு உத்தரவு வரும்வரை சீல் வைக்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து போடி, தேனி, கம்பம், கொடைக்கானல் ஆகிய நகராட்சிகளை சேர்ந்த நகரமைப்பு அலுவலர்கள் தலைமையில் 4 குழுக்கள் அமைக்கப்பட்டு சீல் வைக்கும் நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். இன்று காலை 10 முதல் இப்பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் கொடைக்கானலில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளனர். #tamilnews
    Next Story
    ×