search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாரியில் ஏற்றிச்சென்ற நெல் அறுவடை எந்திரம் மீது மின்கம்பி உரசியதில் வாலிபர் பலி
    X

    லாரியில் ஏற்றிச்சென்ற நெல் அறுவடை எந்திரம் மீது மின்கம்பி உரசியதில் வாலிபர் பலி

    லாரியில் ஏற்றிச்சென்ற நெல் அறுவடை எந்திரம் மீது மின்கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழந்தார்.
    கீழப்பழுவூர்:

    திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா நாகநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அருணாச்சலம். இவருடைய மகன் மோகன்ராஜ்(வயது 22). இவர் தனது தாய் மாமா மாரியப்பனுக்கு சொந்தமான நெல் அறுவடை எந்திரத்தை, அறுவடைக்காக ஓட்டி வந்தார். இந்த நிலையில் அரியலூர் மாவட்டம் கரைவெட்டி கிராமத்தை சேர்ந்த சுதாகரின் வயலுக்கு, நெற்பயிர்களை அறுவடை செய்வதற்காக நேற்று மாலை மோகன்ராஜ், அவருடைய தாய்மாமா மகன் மகேந்திரனுடன்(25) டிப்பர் லாரியில் அறுவடை எந்திரத்தை ஏற்றிக்கொண்டு சென்றார். லாரியை மகேந்திரன் ஓட்டினார். மோகன்ராஜ், லாரியில் ஏற்றப்பட்டிருந்த நெல் அறுவடை எந்திரத்தில் அமர்ந்திருந்தார். சுதாகரின் வயலுக்கு செல்லும் வழியில் மின்சார கம்பிகளை கவனிக்காமல் லாரியை, மகேந்திரன் ஓட்டியதாக தெரிகிறது.

    இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக மின்சார கம்பிகள் நெல் அறுவடை எந்திரத்தின் மீது உரசியது. இதனால் நெல் அறுவடை எந்திரத்தில் அமர்ந்திருந்த மோகன்ராஜ் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட மோகன்ராஜ் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் லாரியை ஓட்டிய மகேந்திரன் கீழே குதித்ததால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    இது குறித்து தகவல் அறிந்த வெங்கனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் மின்வாரிய ஊழியர்கள் மூலம் அந்த பகுதியில் மின்சாரத்தை துண்டித்தனர். இதையடுத்து மோகன்ராஜின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வெங்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  
    Next Story
    ×