search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாலாற்றின் குறுக்கே ஆந்திரா தடுப்பணை கட்டுவதை தடுக்க சட்ட நடவடிக்கை - எடப்பாடி பழனிசாமி விளக்கம்
    X

    பாலாற்றின் குறுக்கே ஆந்திரா தடுப்பணை கட்டுவதை தடுக்க சட்ட நடவடிக்கை - எடப்பாடி பழனிசாமி விளக்கம்

    பாலாற்றின் குறுக்கே ஆந்திரா தடுப்பணை கட்டுவதை தடுக்க சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். #EdappadiPalaniswami #ADMK #TNAssembly

    சென்னை:

    சட்டசபையில் இன்று நந்தகுமார் (தி.மு.க.) பேசுகையில், “பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டி வருகிறது. 21 தடுப்பணைகளை புதுப்பிக்க ரூ.43 கோடி ஒதுக்கி உள்ளது. மேலும் 30 தடுப்பணைகளை புதிதாக கட்டப்போவதாகவும் அதிகாரப்பூர்வமாக தகவல் அனுப்பி உள்ளன. 500 மீ.க்கு ஒரு தடுப்பணை கட்ட உள்ளதால், இதை தடுத்து நிறுத்த வேண்டும்” என்றார்.

    இதே கருத்தை பிரின்ஸ் (காங்.) வலியுறுத்தி பேசினார்.

    இதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து பேசியதாவது:-

    1892-ம் ஆண்டைய மதராஸ்-மைசூர் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி, பன்மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகளில் பாலாறும் ஒன்றாகும்.

    சித்தூர் மாவட்டத்தில், குப்பம் எனும் பகுதியில், பாலாற்றின் குறுக்கே ஒரு அணையினை ஆந்திரா அரசு கட்ட உள்ளதாக அம்மாவின் ஆட்சிக்காலத்தில், செய்தி வந்தபோது தமிழ்நாடு அரசு 10.2.2006 அன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இவ்வாறு வழக்கு தாக்கல் செய்ததன்பேரில், அணைக் கட்டும் பணிகள் தடுக்கப்பட்டன.

    இந்த வழக்கில், தமிழ்நாடு மற்றும் ஆந்திர அரசு சாட்சியாளர்களின் குறுக்கு விசாரணை முடிவடைந்ததை அடுத்து, உச்சநீதிமன்றத்தால் இவ்வழக்கு ஜூலை 2019-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

     


    ஆந்திர அரசு, 1892-ம் ஆண்டைய ஒப்பந்தத்தை மீறும் வகையிலும், தமிழ் நாட்டின் முன் அனுமதி பெறாமலும் தன்னிச்சையாக பாலாறு மற்றும் அதன் கிளை நதிகளின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணைகளின் உயரத்தை உயர்த்தியும், புதியதாக தடுப்பணைகள் கட்டியதும் ஒப்பந்தத்திற்கு முரணானது எனவும், அவைகளை முன்பிருந்த நிலைக்கே கொண்டு வர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்று, தமிழ்நாடு அரசு 18.7.2016 அன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்தது.

    மத்திய நீர்வள ஆதார அமைச்சகம் 7.5.2018 அன்று பாலாறு பிரச்சனை குறித்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு அரசு அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தியது. இக்கூட்டத்தில், தமிழ்நாட்டின் நிலைப்பாடு மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

    பாலாற்றின் குறுக்கே சம்மந்தப்பட்ட படுகை மாநிலங்களின் இசைவு பெறாமல் புதிய தடுப்பணை களை கட்டுவதற்கு முனையக்கூடாது எனவும், இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு பிறப்பிக்கும் வரையில் ஆந்திர அரசு தடுப்பணைகளின் உயரத்தை மேலும் உயர்த்தக்கூடாது எனவும், மத்திய நீர் வள ஆதார துறை செயலாளர் இக்கூட்டத்தின் முடிவில் தெரிவித்தார்.

    மேலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும், எனவும் மாநிலங்களை அவர் கேட்டுக்கொண்டார்.

    இதற்கிடையில், ஆந்திர அரசு, பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணைகளின் பழுதுபார்ப்பு மற்றும் மறு கட்டமைப்பிற்காக 41.75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து ஆணையிட்டதாக செய்தித் தாள்களில் தகவல்கள் வெளியானது.

    இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு 13.11.2018 அன்று ஆந்திர அரசுக்கு அனுப்பிய கடிதத்தில், தடுப்பணைகளுக்கான விவரங்களை தமிழ்நாட்டின் பரிசீலனைக்காக அளிக்க வேண்டியும் மற்றும் தமிழ்நாடு அரசு அதன் கருத்துக்களை அளிக்கும் வரையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதை நிறுத்தி வைக்க வேண்டியும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

    மேலும், மத்திய அரசினையும், இதுகுறித்து ஆந்திர அரசுக்கு உரிய அறிவுரைகள் வழங்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

    ஆந்திர அரசிடமிருந்தோ அல்லது மத்திய அரசிடமிருந்தோ பதில் ஏதும் வரப்பெறாத நிலையில், பாலாற்றின் குறுக்கேயுள்ள 21 தடுப்பணைகளின் பழுதுபார்ப்பு மற்றும் மறு கட்டமைப்புப் பணிகளை உடனடியாக நிறுத்தக் கோரி, உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் ஒரு மனு ஒன்றை 19.11.2018 அன்று தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ளது.

    ஆந்திர அரசு, பாலாற்றின் குறுக்கே மேலும் 30 புதிய தடுப்பணைகளை கட்ட உத்தேசித்திருப்பதாக 5.2.2019 அன்று செய்தி வந்ததையடுத்து, இத்தடுப்பணைகள் கட்டுவதற்கான அனுமதியை வழங்கக்கூடாது எனவும், உச்ச நீதிமன்றத்தின் நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வரும் வரையில் தடுப்பணைகள் கட்டப்படக்கூடாது எனவும், அவ்வரசின் நீர்வள ஆதாரத் துறைக்கு அறிவுரை வழங்குமாறு 6.2.2019 அன்று ஆந்திர அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

    பாலாறு நதிநீர் பிரச்சனையில், இந்த அரசு மிக உன்னிப்புடனும், கவனத்துடனும், சட்டரீதியாகவும், பிரச்சனையை தொடர்ந்து அணுகி வருகிறது. தமிழ் நாட்டின் உரிமையை நிலை நாட்டுவதற்கு அம்மா அரசு அனைத்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #EdappadiPalaniswami #ADMK #TNAssembly

    Next Story
    ×