search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி அருகே தொட்டிலில் தூங்கி கொண்டிருந்த 5 மாத குழந்தையை கடத்திய கும்பல்
    X

    திருச்சி அருகே தொட்டிலில் தூங்கி கொண்டிருந்த 5 மாத குழந்தையை கடத்திய கும்பல்

    திருச்சி அருகே இன்று அதிகாலை தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த 5 மாத பெண் குழந்தையை மர்ம நபர்கள் கடத்தி சென்றனர்.

    திருவெறும்பூர்:

    திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள வள்ளூவர் நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். செப்டிக் டேங்க் லாரி டிரைவர். இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளது. 3-வது பெண் குழந்தை லத்திகா, பிறந்து 5 மாதமே ஆகிறது.

    நேற்றிரவு ராமச்சந்திரன் வேலைக்கு சென்று விட்டார். இதையடுத்து சத்யா லத்திகாவை தொட்டிலில் படுக்க வைத்து விட்டு, மற்ற 2 குழந்தைகளுடன் தூங்கி விட்டார். இன்று அதிகாலை 3 மணியளவில் குழந்தை லத்திகா அழத்தொடங்கவே, சத்யா எழுந்து தாய்ப்பால் கொடுத்து விட்டு, மீண்டும் தொட்டிலில் படுக்க வைத்து விட்டு, அவரும் தூங்கி விட்டார்.

    அதிகாலை 4 மணியளவில் பணிக்கு சென்றிருந்த ராமச்சந்திரன் வீட்டிற்கு வந்தார். அப்போது தொட்டிலில் குழந்தையை பார்த்த போது, குழந்தையை காணவில்லை. இதுபற்றி சத்யாவிடம் கேட்டபோது, தொட்டிலில்தானே தூங்கி கொண்டிருக்கிறது என்று கூறியவாறு, அவரும் தொட்டிலை பார்த்த போது குழந்தையை காணவில்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த கணவன்-மனைவி இருவரும், உறவினர்கள் யாராவது தூக்கி சென்றிருக்கலாம் என்று எண்ணி, அப்பகுதியில் உள்ள உறவினர்களின் வீடுகள் மற்றும் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் குழந்தை லத்திகாவை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    உடனே இது குறித்து ராமச்சந்திரன் திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அமுதராணி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இன்று அதிகாலை சத்யா குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து விட்டு தூங்கியதும் நைசாக வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், குழந்தையை தூக்கி கடத்தி சென்றுள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. குழந்தையை கடத்தி சென்ற மர்ம நபர்கள் யார், எதற்காக கடத்தி சென்றார்கள்? என்று தெரியவில்லை.

    அவர்கள் குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவராக இருக்கலாமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஏதாவது பிரச்சினை காரணமாக குழந்தையை கடத்தி சென்றார்களா ? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 5 மாத குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    Next Story
    ×