search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் 16 சட்டமன்ற தொகுதிகளில் 38 லட்சம் வாக்காளர்கள்
    X

    சென்னையில் 16 சட்டமன்ற தொகுதிகளில் 38 லட்சம் வாக்காளர்கள்

    சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் 38 லட்சத்து 18 ஆயிரத்து 999 வாக்காளர்கள் உள்ளனர். #AssemblyConstituency #VotersList
    சென்னை:

    சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் 1.9.2018 அன்று வெளியிடப்பட்டது.

    1.1.2019 முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் செய்தல் ஆகிய சரிபார்க்கும் பணிகள் நடந்தன. இதில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 385 பேர் தங்கள் பெயர்களை சேர்க்கும்படி மனு கொடுத்தனர்.

    ஏற்கனவே இருந்த வாக்காளர்களில் 4 ஆயிரத்து 371 பெயர்கள் நீக்கப்பட்டன. தகுதி இல்லாதவர்கள் என்ற அடிப்படையில் 80 ஆயிரத்து 293 பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.

    இறுதி வாக்களர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பட்டியலை தேர்தல் அதிகாரியும் மாநகராட்சி கமி‌ஷனருமான கார்த்திகேயன் வெளியிட்டார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    கடந்த 5 மாதங்களாக வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி நடந்தது. இதில் பெயர் விடுபட்டவர்கள், குடிபெயர்ந்தவர்கள், 18 வயது நிரம்பியவர்கள் யார்-யார் என்பதை கள ஆய்வு செய்து பட்டியல் திருத்தப்பட்டது. இந்த பணி இன்றுடன் நிறைவுபெற்றது.

    வழக்கத்துக்கு மாறாக இந்த முறை இந்த பணியை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் 5 மாதங்களை வழங்கி இருந்தது. சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளின் திருத்தப்பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

    இதன்படி சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் 38 லட்சத்து 18 ஆயிரத்து 999 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 18 லட்சத்து 83 ஆயிரத்து 989 பேர். பெண்கள் 19 லட்சத்து 34 ஆயிரத்து 78 பேர். இதர பிரிவினர் 932 பேர்.



    தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி பட்டியலில் வரைவு வாக்காளர் பட்டியலை தவிர 26 ஆயிரத்து 873 வாக்காளர்கள் அதிகம். இது 0.71 சதவீதமாகும்.

    குறைந்த எண்ணிக்கையில் வாக்காளர்களை கொண்ட தொகுதியாக துறைமுகம் உள்ளது. இங்கு ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 515 வாக்காளர்கள் உள்ளனர்.

    அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி வேளச்சேரி. இங்கு 95 ஆயிரத்து 95 வாக்காளர்கள் உள்ளனர்.

    தற்போது வெளியிடப்பட்ட பட்டியலின்படி 18 வயதுக்கு மேற்பட்ட இளம் வாக்காளர்கள் 43 ஆயிரத்து 829 பேர். புதிதாக சேர்க்கப்பட்டவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை விரைவில் வழங்கப்படும்.

    கடந்த 10 நாட்களுக்குள் யாராவது இடம்மாறி இருந்தாலோ, பெயர்கள் விடுபட்டு இருந்தாலோ அவர்கள் தகுதியான சான்றிதழ் கொடுத்தால் வாக்காளர் பட்டியலில் இடம்பெறலாம். இது துணை வாக்காளர் பட்டியலில் வெளியிடப்படும். வாக்காளர் பட்டியலில் தவறுகள் இருந்தால் அதை சரிசெய்து கொள்ளலாம். அரசியல் கட்சிகள் பெரிதாக்க வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, வி.என்.ரவி, ராஜேஷ் ஆகியோர் வாக்காளர் பட்டியலை பெற்றுகொண்டனர்.

    தி.மு.க. சார்பில் பகுதி செயலாளர்கள் மதன் மோகன், மருதுகணேஷ், காங்கிரஸ் மாவட்டதலைவர் சிவராஜசேகர், நாச்சிகுளம் சரவணன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் மதிவாணன், பா.ஜனதா மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்களும் வாக்காளர் பட்டியலை பெற்றுக் கொண்டனர்.

    பேட்டியின்போது சென்னை மாநகராட்சி துணை கமி‌ஷனர் லலிதா உடன் இருந்தார். #AssemblyConstituency #VotersList

    Next Story
    ×