search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீலகிரி மாவட்டத்தில் கடுங்குளிருடன் பனிப்பொழிவு - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
    X

    நீலகிரி மாவட்டத்தில் கடுங்குளிருடன் பனிப்பொழிவு - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

    நீலகிரி மாவடத்தில் தொடர் பனிப்பொழிவும் கடுங்குளிர் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் பனிப்பொழிவு தொடங்கும். ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் படிப்படியாக பனிப்பொழிவு குறைந்து மாத இறுதிக்குள் குளிர்காலம் முடிந்து விடும்.

    ஆனால் தற்போது ஜனவரி மாதம் இறுதி ஆகியும் பனிப்பொழிவு மற்றும் குளிரின் தாக்கம் குறையவில்லை. தினசரி மாலையில் 6 மணிக்கு தொடங்கும் பனிப்பொழிவு மறுநாள் காலை 11 மணி வரை நீடிக்கிறது.

    இதன் காரணமாக ஊட்டி, தலைக்குந்தா, கேத்தி பள்ளத்தாக்கு, குன்னூர் ஜிம்கானா போன்ற பகுதிகளில் புல்வெளிகள் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல் எங்கு பார்த்தாலும் பனி படர்ந்து வெண்ணிறமாக காட்சியளிக்கிறது.

    இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெப்பநிலை தொடர்ந்து 4,5,6 டிகிரி செல்சியசாக குறைந்து காணப்படுகிறது. இன்று காலையில் தாவரவியல் பூங்காவில் 00.73 டிகிரி செல்சியசாக வெப்பநிலை பதிவாகி இருந்தது.

    இரவில் வெளியே நிறுத்திவைக்கப்படும் வாகனங்களில் விழும் பனிப்பொழிவு ஐஸ் கட்டியாக மாறிவிடுகிறது. புல்வெளியில் படர்ந்துள்ள பனிப்பொழிவு காலையில் வெகு நேரம் நீடிப்பதால் கால்நடைகள் மேய்ச்சலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    அவைகளும் சூரிய ஒளியில் நின்று தங்கள் உடலை சூடாக்கி கொள்கின்றது. சாலையோர வியாபாரிகள் கனமான கம்பளி ஆடைகளை அணிந்து வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காலை வெகுநேரம் குளிர் வாட்டி வதைப்பதால் உள்ளூர் வாசிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குளிரால் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடியே காணப்படுகிறது.

    தொடர் பனிப்பொழிவு, கடுங்குளிர் காரணமாக சுற்றுலா பயணிகளின் வரத்தும் குறைவாகவே காணப்படுகிறது.#tamilnews
    Next Story
    ×