search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்ப்பிணியாக இருந்த போது  எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டதாக மேலும் ஒரு பெண் புகார்
    X

    கர்ப்பிணியாக இருந்த போது எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டதாக மேலும் ஒரு பெண் புகார்

    கர்ப்பிணியாக இருந்த போது எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டதாக மேலும் ஒரு பெண் புகார் அளித்துள்ளார். #HIVBlood #PregnantWoman

    விருதுநகர்:

    விருது நகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு அரசு ஆஸ்பத்திரியில் எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தம் செலுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    சென்னையை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டதாக புகார் எழுந்தது.

    இந்த நிலையில் 3-வதாக சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கும் எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது.

    மேச்சேரி அருகே உள்ள குதிரைகாரன் புதூர் கிராமத்தைச் சேர்ந்த 26 வயது பெண் காதல் திருமணம் செய்தவர். இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன.

    கடந்த 2014-ம் ஆண்டு கர்ப்பமாக இருந்தபோது, பரிசோதனை செய்ய மேச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று வந்தார்.

    அப்போது, அவருக்கு ரத்தம் குறைவாக உள்ளதாக கூறி, டாக்டர்கள் ரத்தம் ஏற்றி உள்ளனர். சில நாட்களிலேயே அவருக்கு தலை சுற்றல், உடல் அரிப்பு உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டது.

    இது குறித்து அவர் டாக்டர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள் புது ரத்தம் ஏற்றினால் அதுபோல பாதிப்புகள் வருவது சகஜம் என கூறி உள்ளனர். பின்னர் அவருக்கு குழந்தை பிறந்தது.

    2015-ம் ஆண்டு மீண்டும் அவர் கர்ப்படைந்தார். இதையடுத்து அவர் மேச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக சென்றார். அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருந்ததை கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து டாக்டர்கள் அவருடைய கணவரை அழைத்து மருத்துவ பரிசோதனை செய்தனர். ஆனால், அவருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இல்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதியர் இதற்கு டாக்டர்கள் மற்றும் ஊழியர்களே பொறுப்பு. இது குறித்து உயரதிகாரிகளுக்கு தெரியப்படுத்துவோம் என கூறினர்.

    அப்போது அங்கிருந்த டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள், இதனை வெளியில் கூறினால் உங்களுக்குத் தான் அவமானம். உங்களை ஊரைவிட்டே ஒதுக்கி வைத்து விடுவார்கள் என மிரட்டியதாக தெரிகிறது. பின்னர் மாதந்தோறும் அரசு வழங்கும் ரூ.1000 உதவித் தொகை பெற்றுத் தருவதாக கூறி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே 2-வது குழந்தையும் எச்.ஐ.வி. பாதிப்பு இல்லாமல் பிறந்தது. அதன் பிறகு மாதந்தோறும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் அவருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது அக்கம், பக்கத்தினருக்கு தெரியவந்தது. இதனால் அவரது குடும்பத்தை ஓதுக்கி வைத்தனர். அவர்களது குழந்தைகளுடன் பக்கத்து வீட்டு குழந்தைகள் கூட விளையாட மறுத்தனர்.

    தற்போது குடும்பத்துடன் தனது விவசாய நிலத்தில் உள்ள கூரை வீட்டில் கணவன் -மனைவி இருவரும் குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அலட்சியப்போக்குடன் எச்.ஐ.வி. ரத்தத்தை ஏற்றிய டாக்டர்கள் மீது உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எச்.ஐ.வி. தொற்றுள்ள ரத்தம் கொடுத்த நபரை கண்டறிந்து, அவர் வேறு எங்கும் ரத்தம் கொடுக்காத வகையில் தடுக்க வேண்டும் என்று இப்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து அந்த பெண்ணின் கணவர் கூறும்போது, “தவறு செய்த அதிகாரிகள் மீதும், ரத்தம் கொடுத்தவர் மீதும் உரிய நடவடிக்கை வேண்டும்” என்றார்.

    இந்த சம்பவம் பற்றி சேலம் மாவட்ட சுகாதார துணை இயக்குனர் டாக்டர். பூங்கொடி கூறும் போது, “மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து யார்-யாருக்கெல்லாம் ரத்தம் வழங்கப்பட்டு உள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும்” என்றார். #HIVBlood #PregnantWoman

    Next Story
    ×