search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எழுத்தாளர் பிரபஞ்சன் உடல் நாளை அரசு மரியாதையுடன் தகனம்
    X

    எழுத்தாளர் பிரபஞ்சன் உடல் நாளை அரசு மரியாதையுடன் தகனம்

    புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி, எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என அறிவித்துள்ளார். #Prabhanjan
    புதுச்சேரி:

    சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் புதுவை லாஸ் பேட்டையில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்து வந்தார். 73 வயதான அவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் கடந்த மாதம் அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் புதுவை மதகடிப்பட்டில் உள்ள மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிரபஞ்சன் மரணமடைந்தார்.

    மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் புதுவையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் இரங்கல் தெரிவித்தனர்.

    புதுவை மண்ணின் மைந்தரான எழுத்தாளர் பிரபஞ்சன் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி, கலை இலக்கிய பெருமன்றம், முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம், மக்கள் உரிமை கூட்டமைப்பு, புதுவை பூர்வீக மக்கள் உரிமை சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.


    இதனை ஏற்று முதல்- அமைச்சர் நாராயணசாமி எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என அறிவித்துள்ளார். பிரபஞ்சனின் உடல் தற்போது மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரியின் குளிரூட்டப்பட்ட அறையில் வைக்கப்பட்டிருக்கிறது.

    அங்கிருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு புதுவை ரெயில்வே நிலையம் அருகே பாரதி வீதி வ.உ.சி. வீதி சந்திப்பில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அருகிலேயே எழுத்தாளர் பிரபஞ்சன் அறக்கட்டளை சார்பில் அஞ்சலி கூட்டம் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் படைப்பாளர்கள், எழுத்தாளர்கள் சங்கத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்கின்றனர்.

    தொடர்ந்து மாலை 4 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டு இருக்கும். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக வம்பாகீரப்பாளையம் சன்னியாசி தோப்பில் அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்படுகிறது. #Prabhanjan
    Next Story
    ×