search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடுமுடி அருகே வட்டிக்கு பணம் கொடுத்த தகராறில் மூதாட்டி கொலையா?- போலீஸ் விசாரணை
    X

    கொடுமுடி அருகே வட்டிக்கு பணம் கொடுத்த தகராறில் மூதாட்டி கொலையா?- போலீஸ் விசாரணை

    கொடுமுடி அருகே வீட்டில் மூதாட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொடுமுடி:

    கொடுமுடி அருகே உள்ள ராசாம்பாளையம் சம்மங்குட்டை புதூரை சேர்ந்தவர் முத்துசாமி. விவசாயி. இவரது மனைவி அருக்காணி (வயது 70).

    இவர்களுக்கு திலகவதி (49), செல்வி (40) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். 2 பேருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. திலகவதி கரூரிலும், செல்வி சுமைதாங்கி புதூரிலும் வசிக்கிறார்கள்.

    செல்வியின் கணவர் இறந்துவிட்டார். எனவே செல்வி வீட்டில் முத்துசாமி தங்கி உள்ளார். சம்பவத்தன்று அருக்காணியும் அங்கு சென்றிருந்தார். பின்னர் சம்மங்குட்டைபுதூருக்கு திரும்பினார்.

    இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் அருக்காணி பிணமாக கிடந்தார். கட்டிலில் கிடந்த அவரது வாய் பகுதியில் பலத்த காயம் இருந்தது. அதில் இருந்து ரத்தம் வழிந்திருந்தது.

    அவரை யாரோ அடித்து கொலை செய்துள்ளனர். இது பற்றி தகவல் கிடைத்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், பெருந்துறை டி.எஸ்.பி., கொடுமுடி போலீஸ் இன்ஸ் பெக்டர் மணிகண்டன் ஆகி யோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று இரவு 10.30 மணி அளவில் வீட்டின் கதவு சாத்தப்பட்டிருந்ததையும், அருக்காணி டி.வி. பார்த்ததையும் சிலர் பார்த்துள்ளனர்.

    டி.வி. காலை 9 மணி வரை ஆப் செய்யப்படவில்லை. இதனால்தான் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளனர். இதை வைத்து பார்க்கும்போது இரவு 10.30 மணிக்கு மேல்தான் யாரோ அருக்காணியை கொலை செய்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.

    அருக்காணியின் வாய் பகுதியில் கொலையாளி தாக்கியுள்ளார். அந்த தாக்குதலால் அருக்காணியின் வாய் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பல பற்கள் உடைந்துள்ளன. இதனால் வாய் பகுதியில் இருந்து ரத்தம் வழிந்துள்ளது.

    முதலில் இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அருக்காணி ரத்த வாந்தி எடுத்து இறந்ததாக பேசியுள்ளனர். போலீசார் வந்து பார்த்த பின்னர்தான் வாய் பகுதியில் கொலையாளி தாக்கி இருப்பது கண்டறியப்பட்டது.

    அருக்காணி வட்டிக்கு பணம் கொடுத்து வந்தாராம். சமீபத்தில் 3 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்தனர். அதில் ரூ. 8 லட்சம் பணம் வந்தது. அதில் ரூ. 4 லட்சத்தை மகள்களுக்கு கொடுத்தனர். ரூ. 2 லட்சத்தை உறவினர் ஒருவருக்கு கொடுத்ததாகவும், மீதி பணத்தை வட்டிக்கு கொடுத்ததாகவும் தெரிகிறது.

    எனவே வட்டிக்கு பணம் பெற்றவர்களிடம் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கொலை நடந்தபோது அருக்காணி சத்தமிட்டுவிடக்கூடாது என்பதற்காக கொலையாளி வாயில் தாக்கினாரா? அல்லது அருக்காணி யாரையாவது திட்டியதால் வாயில் தாக்கப்பட்டாரா? என்பது தெரியவில்லை. அது தொடர்பாக விசாரணை நடக்கிறது.

    அருக்காணி நகை அணிந்திருந்ததாகவும் அந்த நகையை காணவில்லை என்றும் கூறப்படுகிறது.சிலர் அருக்காணி நகையை அவ்வப்போது கழற்றி வைத்துவிடுவார் என்றும் கூறுகிறார்கள்.

    எனினும் அந்த நகைக்காக அருக்காணி கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×