search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்-அமைச்சர் நாராயணசாமி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - சாமிநாதன் அறிவிப்பு
    X

    முதல்-அமைச்சர் நாராயணசாமி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - சாமிநாதன் அறிவிப்பு

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Narayanasamy #BJP

    புதுச்சேரி:

    புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் அதை வரவேற்பதையும், எதிர்ப்பாக தீர்ப்பு வந்தால் விமர்சிப்பதையும் காங்கிரஸ் அரசு பல்லாண்டு காலமாக வாடிக்கையாக வைத்துள்ளது. அலகாபாத் நீதிமன்றம் இந்திராகாந்திக்கு எதிராக தீர்ப்பளித்தபோது அதை எதிர்த்தனர். அன்று முதல் இதையே வாடிக்கையாக வைத்துள்ளனர்.

    தற்போது சுப்ரீம் கோர்ட்டு நியமன எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு நியமித்தது செல்லும் என ஐகோர்ட்டு தீர்ப்பை உறுதி செய்துள்ளது. இது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படிதான் தீர்ப்பை வழங்கியுள்ளதாகவும், அதில் திருத்தங்களை செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் விளக்கியுள்ளது.

    ஆனால் தீர்ப்பில் ஓட்டை உள்ளது என முதல்-அமைச்சர் பொறுப்பு வகிக்கும் நாராயணசாமி கூறியுள்ளார். அவர் மீது கட்சித் தலைமையின் அனுமதி பெற்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும். ஏற்கனவே சபாநாயகர் மீது தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் நிலுவையில் உள்ளது.

     


    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை விமர்சித்து புதுவை முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். பாராளுமன்ற செயலாளர் பதவியை வைத்துக்கொண்டு சுப்ரீம் கோர்ட்டை விமர்சித்திருப்பது கண்டனத்திற்குரியது. அவரின் பாராளுமன்ற செயலாளர் பதவியை கவர்னர் பறிக்க வேண்டும். அவர் மீதும் நீதிமன்ற வழக்கு தொடரப்படும். சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கைகளை எடுப்போம்.

    மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி உண்மைக்கு மாறான தகவல்களை தொடர்ந்து பரப்பி வருகிறார். மத்திய அரசு மீது திட்டமிட்டு பழியை சுமத்தி வருகிறார். கர்நாடகாவில் ஆட்சி செய்வது குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசுதான். அந்த ஆட்சியில் அங்கம் வகிக்கும் நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவர்தான் அணை கட்டுவதற்கான தீர்மானத்தை கொண்டுவந்துள்ளார். தொடர்ந்து அணை கட்டுவதில் உறுதியாக இருப்போம் என்றும் கூறி வருகிறார்.

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி அவரை சந்தித்து பேசினாலே அணை கட்டுவதை தடுத்துவிட முடியும். ஆனால் அவர் மத்திய அரசு மீது வீண் பழி சுமத்தி வருகிறார். இது நாராயணசாமியின் இரட்டை வேடத்தை காட்டுகிறது. சுப்ரீம் கோர்ட்டில் புதுவை மாநிலம் மத்திய அரசின் சொத்து என கூறியதை பலரும் பலவிதமாக விமர்சித்து வருகின்றனர். நமது பிள்ளையைக்கூட நாம் நமது சொத்து என்றுதான் கூறுவோம். அந்த அடிப்படையில்தான் உறவின் வலிமையை காட்ட புதுவை மத்திய அரசின் சொத்து என கூறியுள்ளனர். இதையறியாமல் தேவையற்ற விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர்.

    புதுவையில் உள்ள காங்கிரஸ் அரசை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்படவில்லை. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் அதிருப்தியால் வரும் காலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Narayanasamy #BJP

    Next Story
    ×