search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவகங்கை மாவட்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்படும்- கலெக்டர் தகவல்
    X

    சிவகங்கை மாவட்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்படும்- கலெக்டர் தகவல்

    சிவகங்கை மாவட்டத்தில் நீர்வரத்துக் கால்வாய் சீரமைக்க எந்திரங்களை பயன்படுத்தி பணிகளை மேற்கொள்ள கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவிட்டுள்ளார்.

    சிவகங்கை:

    சிவகங்கை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது:-

    நிலுவையில் உள்ள பயிர் காப்பீட்டுத் தொகை கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும். பயிர் காப்பீடு செய்யாதவர்களுக்கு பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலம் பயிர் சேதங்களுக்கு ஏற்ப கணக்கிட்டு உரிய இழப்புகள் வழங்கப்படும்.

    கண்மாய்க்கு செல்லும் வரத்துக் கால்வாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கு தட்கல் முறையில் மின்சாரம் வரிசைப்படி வழங்கப்படும். சேதமடைந்த மின்கம்பங்கள் சரிசெய்யப்படும். ஊராட்சி சாலைகளை சீரமைக்கவும், நெடுஞ் சாலைகளை மாற்றி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் சேதமடைந்த வீடுகளில் பராமரிப்பு மேற்கொள்ளப்படும். வீடுகளும் கட்டித்தரப்படும்.

    நெடுஞ்சாலை அமைப்பதற்கு விளை நிலங்கள் வழங்கியவர்கள் வருவாய்த் துறையின் மூலம் கணக்கிட்டு உரிய தொகை விரைவில் வழங்கப்படும். விவசாயிகளின் கோரிக்கைக்கேற்ப வருவாய்த்துறை சான்றிதழ் கிராம நிர்வாக அலுவலர் மூலம் உடனடியாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதேபோல் ஒவ்வொரு ஒன்றியத்திலும் நீர்வரத்துக் கால்வாய் சீரமைக்க எந்திரங்களை பயன்படுத்தி பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. பணிகள் நடைபெறும்போது அந்தந்த பகுதி விவசாயிகள் கண்காணித்து தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும்.

    ஆக்கிரமிப்புகள் தொடர்பாக பெறப்படும் மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வட்டாட்சியர்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளது. பொதுப் பணித்துறை கால்வாய்களாக இருந்தாலும் அவர்களிடம் தடையின்மை சான்று வாங்கி உள்ளாட்சி அமைப்புக்கள் மூலம் வரத்துக்கால்வாய்கள் சீர மைக்கப்படும். மேலும் நீர்நிலைகளிலுள்ள ஆக்கிர மிப்புக்களை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

    இவ்வாறு அவர் பேசினார்.

    வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சேகர், கூட்டுறவுத்துறை இணைப் பதிவாளர் ஆரோக்கிய சுகுமார், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் பழனீஸ்வரி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முருகேசன், குன்றக்குடி வேளாண் அறிவியல் மைய இயக்குநர் செந்தில்குமரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சர்மிளா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×