search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குளித்தலை அருகே மண்மேட்டு புற்று மாரியம்மன் கோவிலில் தீ விபத்து
    X

    குளித்தலை அருகே மண்மேட்டு புற்று மாரியம்மன் கோவிலில் தீ விபத்து

    குளித்தலை அருகே உள்ள மண்மேட்டு புற்று மாரியம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1½ லட்சம் பொருட்கள் எரிந்து நாசமாயின.
    குளித்தலை:

    குளித்தலை அருகே உள்ள திம்மம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது கணக்கப்பிள்ளையூர் அம்மன் நகர். இப்பகுதியில் சாலையோரத்தில் மண்மேட்டு புற்று மாரியம்மன் கோவில் ஒன்று 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. இக்கோவிலில் விநாயகர், புற்று மாரியம்மனுக்கு தனித்தனி சன்னதி உள்ளது. இக்கோவில் முகப்பு பகுதியின் இடதுபுறம் உள்ள கீற்றுக்கொட்டகையில் அம்மன் முகம், கை, கால் உள்ளிட்ட உருவங்கள் வைத்தும் தனியாக இந்த கிராம பகுதி மக்களால் வழிபட்டு வரப் பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த கீற்றுக்கொட்டைகையில் இருந்து புகை வந்தது. இதைகண்ட அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து கோவில் பூசாரியான அதே பகுதியை சேர்ந்த சரவணனிடம் தகவல் தெரிவித்தனர். பின்னர் பூசாரியுடன் கிராமத்தினர் பலர் ஒன்று சேர்ந்து அருகில் இருந்த தண்ணீரைக்கொண்டு தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த கீற்றுக்கொட்டகை முற்றிலும் எரிந்தது.

    மேலும் அங்கு இருந்த வெண்கலம், பித்தளை ஆகிய உலோகத்தினால் ஆன அம்மன் முகம், கை, கால்கள், சூலம், மணி, பூஜை செய்ய பயன்படுத்தப்படும் பொருட்கள், சமையல் பாத்திரங்கள், ஒலிபெருக்கி, பீரோ மற்றும் அதில் இருந்த புடவைகள், சாமிக்கு அலங்காரம் செய்ய வைத்திருந்த கவரிங் நகைகள் உள்ளிட்ட அனைத்தும் எரிந்து நாசமாயின. மின் கசிவின் காரணமாக கீற்றுக்கொட்டகையில் தீப்பிடித்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது. மேலும் தீக்கிரையான பொருட்களின் மதிப்பு ரூ.1½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து குளித்தலை போலீசாருக்கும், மின்சாரவாரிய அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கோவிலில் நிகழ்ந்த தீ விபத்து சம்பவம் அப்பகுதி மக்களிடையே மனவருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. 
    Next Story
    ×