search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகள் இயற்கை விவசாயம் செய்ய முயற்சிக்க வேண்டும்- கலெக்டர் பேச்சு
    X

    விவசாயிகள் இயற்கை விவசாயம் செய்ய முயற்சிக்க வேண்டும்- கலெக்டர் பேச்சு

    விவசாயிகள் மருந்துகள் மூலம் விவசாயம் செய்வதை விட்டு இயற்கை விவசாயம் செய்ய முயற்சிக்க வேண்டும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசினார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூக்கல்தொரை ஊராட்சியில் மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 100 விவசாய பயனாளிகளுக்கு விலையில்லா நுண்ணீர் பாசன கருவிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கி கூறியதாவது,

    நீலகிரி மாவட்டம் இயற்கையும் பசுமையும் நிறைந்த மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பது விவசாயம் தான். விவசாயிகளான நீங்கள் மருந்துகள் மூலம் விவசாயம் செய்வதை விட்டு இயற்கை விவசாயம் செய்ய முயற்சிக்க வேண்டும்.

    இயற்கை விவசாயம் செய்ய செலவு மிகவும் குறைவு. இங்குள்ள விவசாயிகள் விவசாயத்தில் மிகவும் ஈடுபாட்டுடனும், அக்கறையுடனும் இருக்கின்றீர்கள். கூக்கல்தொரை உழவர் உற்பத்தியாளர் குழு மாவட்டத்தில் மிகசிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாவட்டத்திலுள்ள மற்ற உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு இது ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதனைத் தொடர்ந்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை துறை சார்பில் மகாத்மாகாந்தி வேலை உறுதிதிட்டத்தின்கீழ், கூக்கல்தொரை முதல் கம்பட்டி கம்மை பகுதி வரை ரூ.41 லட்சம் மதிப்பில் 700 மீ தூரம் நடைபெற்று வரும் சாலைப்பணியினையும், மகாத்மா காந்தி வேலை உறுதிதிட்டத்தின்கீழ், ரூ.1,95,000 மதிப்பில் கூக்கல் தொரை முதல் அரங்கிபுதூர் வரை 200மீ தூரம் சாலைப்பணியினையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

    முன்னதாக, ஊட்டி நகராட்சிக்குட்பட்ட வேளாண் பொறியில் துறையின் சார்பில், ரூ.41 லட்சம் மதிப்பில் கோடப்பமந்து கால்வாய் தூர்வாரும் பணியினையும், கலெக்டர் பார்வையிட்டார்கள். இந்நிகழ்ச்சியில் கோபாலகிருஷ்ணன் எம்.பி., தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர்சிவசுப்ரமணிய சாம்ராஜ், தோட்டக்கலை உதவி இயக்குநர்மீராபாய், தோட்டக்கலைத்துறை அலுவலர்சந்திரன், விவசாய பெருங்குடிமக்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×