search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொழிலாளி மர்ம மரணம்- எஸ்டேட் அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை
    X

    தொழிலாளி மர்ம மரணம்- எஸ்டேட் அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை

    வால்பாறை தொழிலாளி மர்ம சாவு தொடர்பாக தேயிலை தோட்ட அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை சிறு குன்றா எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் மில்லர் (52). இவரது மனைவி லில்லி விக்டோரியா. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

    ஜார்ஜ் மில்லர் அங்குள்ள தேயிலை தோட்டத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன் எஸ்டேட் அலுவலகத்துக்கு சம்பளம் வாங்க சென்றுள்ளார்.

    அப்போது இவருக்கும் எஸ்டேட் அதிகாரிகள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் இருவரும் சேர்ந்து ஜார்ஜ் மில்லரை சரமாரியாக அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் காயம் அடைந்த அவர் வால்பாறை, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஜார்ஜ் மில்லர் மனைவி தனது கணவரை எஸ்டேட் பீல்டு ஆபீசர் ரமேஷ் குமார் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் தாக்கியதாகவும் அதில் தான் தனது கணவர் இறந்ததாகவும் வால்பாறை போலீசில் புகார் செய்தார்.

    இதனை தொடர்ந்து எஸ்டேட் அதிகாரிகள் ரமேஷ் குமார், முத்துக்குமார் ஆகியோரிடம் வால்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஜார்ஜ் மில்லர் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் தான் அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×