search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை - சேர்வலாறு அணை நீர்மட்டம் 93 அடியாக உயர்வு
    X

    நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை - சேர்வலாறு அணை நீர்மட்டம் 93 அடியாக உயர்வு

    நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதையடுத்து சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று 93.11 அடியாக உயர்ந்துள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை கொட்டுகிறது. இதனால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி கிடக்கின்றன. சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல ஓடியது. நேற்று காலையில் கடும் வெயில் அடித்தது. மதியம் வானில் கருமேகங்கள் சூழ்ந்தன.

    பின்னர் பல பகுதிகளில் கன மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக அடவிநயினார் அணைப்பகுதியில் 70 மில்லிமீட்டர் மழை பதிவானது. சிவகிரியில் 37 மில்லிமீட்டர் மழையும், சங்கரன்கோவிலில் 25 மில்லிமீட்டர் மழையும், ஆய்க்குடி மற்றும் கருப்பாநதியில் தலா 24 மில்லிமீட்டர் மழையும் பெய்தது.

    பாளையில் 18.20 மில்லிமீட்டர் மழை, சேர்வலாறில் 18 மில்லி மீட்டர் மழை, நெல்லையில் 14 மில்லிமீட்டர் மழை, ராதாபுரத்தில் 6 மில்லிமீட்டர் மழை, செங்கோட்டையில் 2 மில்லிமீட்டர் மழை பதிவானது. மலைப்பகுதியில் பெய்த மழையினால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    பிரதான பாசன அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று 100.70 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 604 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 85.89 அடியாக இருந்தது. இரவு பெய்த மழையினால் இந்த அணை நீர்மட்டம் இன்று 93.11 அடியாக உயர்ந்துள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 84.60 அடியாக உள்ளது.

    சங்கரன்கோவில் தொடர் மழையினால் சங்கரன்கோவில் இருமன்குளத்தை சேர்ந்த வேல்சாமி, தங்கப்பாண்டி ஆகியோரது வீடுகள் இடிந்து சேதமடைந்தன. இன்றும் மாவட்டத்தில் பல பகுதிகளில் மழை பெய்தது.

    Next Story
    ×