search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேளச்சேரியில் குழந்தையை கொன்ற தாய்
    X

    வேளச்சேரியில் குழந்தையை கொன்ற தாய்

    வேளச்சேரியில் குழந்தையை தாய் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை:

    வேளச்சேரி, திரவுபதி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் வெங்கண்ணா. தரமணியில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.இவரது மனைவி உமா. கடந்த 35 நாட்களுக்கு முன்பு இவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு சர்விக் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர்.

    நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிய குழந்தை சர்விக் காணாமல் போனது. குழந்தையை மர்மநபர்கள் கடத்தி சென்று விட்டதாக உமா தெரிவித்தார். இரவு புழுக்கமாக இருந்ததால் காற்றுக்காக கதவை திறந்து வைத்திருந்ததாகவும், அப்போது யாரோ குழந்தையை தூக்கிச் சென்று விட்டனர் என்றும் கூறினார்.

    இதுபற்றி வேளச்சேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. வீடு புகுந்து குழந்தை கடத்தப்பட்டதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    காணாமல் போன குழந்தையை கண்டுபிடிக்க போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது நைட்டி அணிந்த பெண் ஒருவர் குழந்தையை தூக்கிச்செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

    அந்த பெண் யார்? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டது. போட்டோவில் இருக்கும்  குழந்தையின் தாய் உமாவின் தோற்றத்தில் இருந்தது. இதனால் உமா மீது போலீசுக்கு சந்தேகம் வலுத்தது.

    இதையடுத்து உமாவிடம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. அவர் எந்தவித பதட்டமும் இல்லாமல் இருந்தார். இதுவும் அவர் மீதான சந்தேகத்தை அதிகப்படுத்தியது. அவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் குழந்தையை கொன்று நாடகமாடியதை உமா ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    குழந்தையின் உடலை பிளாஸ்டிக் பையில் சுற்றி அருகில் உள்ள ஏரியில் வீசிவிட்டதாக உமா தெரிவித்தார். போலீசார் ஏரியில் தேடி குழந்தையின் உடலை மீட்டனர்.

    பாலூட்டும் போது மார்பகத்தில் வலி ஏற்பட்டதாலேயே குழந்தையை கொலை செய்ததாக தாய் உமா திடுக்கிடும் தகவலை கூறினார். இதனை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.


    இதுதொடர்பாக உமா அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

    குழந்தை பிறந்த பின்னர் பாலூட்டுவது சிரமமாக இருந்தது. கடந்த 15 நாட்களாக பால் கொடுக்கும் போது மார்பகத்தில் எனக்கு அதிகமான வலி ஏற்பட்டது.

    எனது கணவருடனும், தாயிடமும் இதுபற்றி பலமுறை கூறினேன். என்னால் குழந்தையை வளர்க்க முடியாது. தனது தாயிடம் நீங்களே வளர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினேன். ஆனால் எனது வலியை யாரும் பொருட்படுத்தவில்லை.

    இது எனக்கு மிகுந்த மனவேதனையை அளித்தது. குழந்தையை கொன்றுவிட வேண்டும். அப்போது தான் நிம்மதியாக இருக்க முடியும் என்று எண்ணினேன்.

    நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டில் எல்லோரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். குழந்தையும் தூங்கிக் கொண்டிருந்தது. இதுதான் குழந்தையை கொலை செய்ய சரியான நேரம் என்று நினைத்து தூங்கிய குழந்தையை தூக்கி பாலிதீன் கவரில் போட்டு சுற்றி கொலை செய்தேன்.

    பின்னர் யாருக்கும் தெரியாமல் அருகில் உள்ள ஏரியில் போட்டுவிட்டேன். பின்னர் ஒன்றும் தெரியாதது போல வீட்டில் வந்து படுத்துக் கொண்டேன்.

    காலையில் எழுந்ததும் எனது கணவர் குழந்தையை தேடினார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்களும் தேடினார்கள். நானும் அவர்களோடு சேர்ந்து தேடினேன். குழந்தையை யாரோ கடத்திச் சென்று விட்டனர் என்று கூறினேன்.

    இதனை வீட்டில் இருந்தவர்களும் நம்பிவிட்டனர். ஆனால் போலீசார் விசாரித்ததில் உண்மை வெளிப்பட்டு விட்டது.

    இவ்வறு உமா கூறியுள்ளார்.

    இச்சம்பவம் தொடர்பாக வேளச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். இன்று காலை 6 மணி அளவில் குளத்தில் இருந்து குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது.

    கைது செய்யப்பட்ட தாய் உமா கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பெற்ற குழந்தையை பாலூட்டி வளர்க்க வேண்டிய தாயே அதன் வலியை தாங்க முடியாமல் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    வெங்கண்ணா-உமா தம்பதியின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் ஆகும்.

    Next Story
    ×