search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அய்யம்பேட்டையில் ஆசிரியர் வீட்டில் 30 பவுன் நகைகள்- வெள்ளி பொருட்கள் கொள்ளை
    X

    அய்யம்பேட்டையில் ஆசிரியர் வீட்டில் 30 பவுன் நகைகள்- வெள்ளி பொருட்கள் கொள்ளை

    தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் ஆசியர் வீட்டு கதவை உடைத்து 30 பவுன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    அய்யம்பேட்டை:

    தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை கீழமேல் புதுத் தெருவை சேர்ந்தவர் கணேஷ் (வயது52). இவர் அய்யம்பேட்டை அருகே உள்ள மாத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் கடந்த 4-ந்தேதி இரவு திருப்பதிக்கு சென்றுள்ளார்.

    இந்நிலையில் இன்று காலை இவரது வீட்டு கதவு திறந்து கிடப்பதை கண்ட அப்பகுதி மக்கள் இதுபற்றி அய்யம்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீசார் விரைந்து பார்த்தபோது மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த 3 பீரோக்களையும் உடைத்து பொருட்களை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. மேலும் பின்பக்க கதவும் உடைக்கப்பட்டு இருந்தது.

    இதுபற்றி போலீசார் கணேசுக்கு போன் செய்து வீட்டில் திருட்டு நடந்திருப்பதாகவும். வீட்டில் இருந்த பொருட்கள் பற்றியும் விசாரித்தனர். அப்போது பீரோவில் 30 பவுன் நகைகள் மற்றும் 3 கிலோ வெள்ளி பொருட்கள் வைத்திருந்தாக கணேஷ் தெரிவித்தார்.

    அதன் மூலம் 30 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

    கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்கள் வீட்டின் சமையல் அறையில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து வீடு முழுவதும் தூவி விட்டு சென்றுள்ளனர். அவர்கள் மோப்பநாய் கொண்டு துப்பு துலக்க முடியாதவாறு இதனை தூவி சென்றுள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×