search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரக்கோணத்தில் டீக்கடைக்குள் கார் புகுந்தது- பெண் பலி
    X

    அரக்கோணத்தில் டீக்கடைக்குள் கார் புகுந்தது- பெண் பலி

    அரக்கோணத்தில் டீ கடைக்குள் கார் புகுந்த விபத்தில் பெண் ஒருவர் பலியானார். 4 பேர் பலத்த காயமடைந்தனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் காந்திநகரை சேர்ந்தவர் ராணி (வயது 40). இவர் இன்று காலையில், வழக்கம்போல் கூலி வேலைக்கு செல்ல சில தொழிலாளர்களுடன் அரக்கோணம் சுவால்பேட்டை மேட்டுத்தெருவில் உள்ள ஜானி என்பவரின் டீக்கடை முன்பு நின்றிருந்தார்.

    அப்போது, திருத்தணி நோக்கி வேகமாக சென்ற கார் திடீரென நிலைதடுமாறி டீக்கடைக்குள் புகுந்தது. அங்கிருந்த பொதுமக்கள் பலரின் மீது கார் பயங்கரமாக மோதி நின்றது. இதில் பலத்த காயமடைந்த ராணி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.

    மேலும் அரக்கோணம் சிறுணமல்லியை சேர்ந்த சந்திரன், காந்தி நகரை ஜீவ ரத்தினம், நெமிலியை சேர்ந்த ராஜவேலு மற்றும் மங்கம்மாபேட்டையை சேர்ந்த சேகர் ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர்.

    உயிருக்கு போராடிய அவர்களை அங்குள்ளவர்கள் மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக சேகரை தவிர மற்ற 3 பேரும் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப் பட்டனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அரக்கோணம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான ராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து ஏற்படுத்திய சென்னை மண்ணிவாக்கத்தை சேர்ந்த கார் டிரைவர் சீனிவாசனை (48) கைது செய்தனர்.

    காருக்குள் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் மற்றும் அவரது மனைவி, குழந்தை உள்பட 4 பேர் இருந்தனர். இவர்கள், அரக்கோணம் நேதாஜி நகரில் நடந்த உறவினரின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள வந்தபோது கார் விபத்தில் சிக்கியது. விபத்தில் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    Next Story
    ×