search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென் தமிழகம் - கேரளாவுக்கு மழை எச்சரிக்கை
    X

    தென் தமிழகம் - கேரளாவுக்கு மழை எச்சரிக்கை

    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கும், கேரளாவில் அடுத்த 4 நாட்களுக்கும் பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. #TNRain #KeralaRain
    சென்னை:

    கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை கேரளாவில் பலமாக கொட்டி நாடு முழுவதும் பரவலாக பெய்தது.

    தற்போது பருவ மழையானது கிழக்கு உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், வடக்கு மராட்டியம், குஜராத் மாநிலங்களில் நின்று போனது. அடுத்த 24 மணி நேரத்தில் கர்நாடகம், மற்றும் அரபிக்கடல் பகுதியிலும் பருவ மழை முடிவுக்கு வருகிறது. கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மட்டும் லேசாக மழை பெய்து வருகிறது

    இந்த நிலையில் தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் மேலடுக்கு சுழற்றி நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் (5-ந்தேதி) குறைந்த காற்றழுத்த பகுதியாக உருவாகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறி வடமேற்கு திசையில் நகரும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக கேரளாவில் இன்று காலை முதல் 7-ந்தேதி காலை 4 மணி வரை 4 நாட்களுக்கு பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்றும் 8-ந்தேதி மழை குறையும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.



    இதேபோல் தென்மேற்கு வங்க கடலில் மற்றும் அதனையொட்டியுள்ள தமிழக கடலோரப் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்றும், அதன் பிறகு மேலும் 3 நாட்களுக்கு பலத்த மழை நீடிக்கும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. #TNRain #KeralaRain
    Next Story
    ×