search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிணத்துக்கடவு போலீஸ் சார்பில் மக்களின் குறைதீர்க்க 17 இடங்களில் புகார் பெட்டி
    X

    கிணத்துக்கடவு போலீஸ் சார்பில் மக்களின் குறைதீர்க்க 17 இடங்களில் புகார் பெட்டி

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்கள் புகார் தெரிவிக்க வசதியாக புகார் பெட்டி அமைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
    கிணத்துக்கடவு:

    கோவை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் பொதுமக்கள் பல்வேறு புகார்கள் குறித்து தெரிவித்து வருகின்றனர். இந்த புகார்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும் சிலர் புகார் குறித்து மனுக்கள் வழங்க தயங்கிவந்தனர்.

    தற்போது பொதுமக்கள் தயக்கம் இன்றி புகார் மனுக்கள் வழங்கும் வகையில் கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதியில் மனு வழங்க வசதியாக கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் உத்தரவின்பேரில் பேரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு வேல்முருகன் மேற்பார்வையில் கிணத்துக்கடவு பகுதியில் கிணத்துக்கடவு, சொக்கனூர், அரசம்பாளையம், நல்லட்டிபாளையம், கோவில் பாளையம், நெம்பர்.10.முத்தூர் உள்ளிட்ட 17 தாய் கிராமங்களில் கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் புகார் பெட்டி அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து பேரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு வேல்முருகன் கூறியதாவது:-

    பேரூர் உட்கோட்டத்திற்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் 100 தாய்கிராமங்கள் உள்ளன. இந்த தாய்கிராமங்கள் அனைத்தும் கண்காணிக்க அந்ததந்த போலீஸ் நிலையங்களின் எல்லையில் உள்ள போலீசார் தனியாக ஈடுபட உள்ளனர்.

    மேலும் அந்தந்த போலீஸ் நிலைய எல்லையில் உள்ள தாய் கிராமங்களில் பொதுமக்கள் புகார் தெரிவிக்க வசதியாக புகார் பெட்டி வைக்கப்பட்டு வருகிறது.

    இந்த புகார் பெட்டியில் அந்தந்த தாய் கிராமங்களில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் செல்போன் எண்களும் எழுதப்பட்டிருக்கும்.

    இந்த புகார் பெட்டியில் பொதுமக்கள் தங்கள் கிராமங்களில் சட்டவிரோத செயல்கள் நடந்தால் அதையும் புகார் மனுவாகவும், தொலைபேசியிலும் தெரிவிக்கலாம்.

    புகார் கூறுபவர்களின் பெயர் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும். அதேபோல் தினசரி புகார் பெட்டி திறக்கப்பட்டு அந்த மனுக்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் கிராம பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்க முடியும்.

    கிராம பகுதிகளில் புகார் பெட்டி அமைக்கும் பணிகள் பேரூர் உட்கோட்ட பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் அனைத்தும் அக்டோபர் மாதம் இறுதிக்குள் முழுவதும் முடிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×