search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை அருகே போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு
    X

    கோவை அருகே போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு

    கோவை அருகே குடி போதையில் போலீஸ்காரரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கவுண்டம்பாளையம்:

    கோவை பெரிய நாயக்கன் பாளையம் அருகே உள்ள பிரஸ்காலனி சாந்திமேட்டை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் வெங்கடேஷ்குமார் (வயது 26). இவர் அன்னூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று இரவு 8.30 மணியளவில் வெங்கடேஷ் குமார் வேலை முடிந்ததும் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். சாந்திமேடு அருகே சென்ற போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் நின்று கொண்டு இருந்த 3 வாலிபர்கள் குடி போதையில் சத்தம் போட்டு கொண்டு இருந்தனர். இதனை பார்த்த வெங்கடேஷ்குமார் சத்தம் போடக்கூடாது என 3 பேரையும் எச்சரித்து அனுப்பினார்.

    பின்னர் வெங்கடேஷ் குமார் அந்த பகுதியில் உள்ள மைதானத்தில் நண்பரை சந்தித்து பேசி விட்டு இரவு 10.30 மணியளவில் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது காரில் பின்தொடர்ந்து வந்த அந்த 3 வாலிபர்களில் ஒருவர் காரில் இருந்து இறங்கி ஓடி வந்து தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் வெங்டேஷ்குமாரை வெட்டினார்.

    இதில் இடது கை, கழுத்து பகுதிகளில் வெட்டு காயம் ஏற்பட்டது. இதில் அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டார். பின்னர் அந்த 3 வாலிபர்களும் காரில் தப்பிச் சென்றனர்.

    வெட்டு காயத்துடன் உயிருக்கு போராடிய வெங்கடேஷ்குமாரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இது குறித்து வெங்கடேஷ்குமார் பெரிய நாயக்கன் பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி போலீஸ் காரரை வெட்டி விட்டு தப்பிச் சென்ற 3 வாலிபர்களை தேடி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் இரவு பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×