search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புழல் சிறையில் மீண்டும் சோதனை: பிரியாணி அண்டா- ஆஸ்பத்திரி கட்டில்கள் கண்டுபிடிப்பு
    X

    புழல் சிறையில் மீண்டும் சோதனை: பிரியாணி அண்டா- ஆஸ்பத்திரி கட்டில்கள் கண்டுபிடிப்பு

    சென்னை புழல் சிறையில் போலீசார் மீண்டும் நடத்திய சோதனையில் பிரியாணி சமைக்கும் அண்டா, ஆஸ்பத்திரியில் பயன்படுத்தும் கட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். #PuzhalJail
    சென்னை:

    புழல் ஜெயிலில் கைதிகள் சிலர் ஆடம்பரமாக இருக்கும் படங்கள் சமீபத்தில் வெளியானது.

    இதையடுத்து கடந்த 2 வாரத்துக்கு முன்பு புழல் ஜெயிலில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    இதில் நவீன செல்போன்கள், டி.வி.க்கள், ஓட்டலில் இருந்து வரவழைக்கப்பட்ட உணவுகள், போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து சில அதிகாரிகள் புழல் ஜெயிலில் இருந்து மாற்றப்பட்டனர். இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உள்ள ஜெயில்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. புழல் ஜெயிலில் இதுவரை 4 முறை சோதனைகள் நடைபெற்றது.

    இந்த நிலையில் புழல் சிறை வளாகத்தில் உள்ள தண்டனை கைதிகள் சிறையின் புதிய கண்காணிப்பாளராக செந்தில்குமார் பொறுப்பேற்றார்.

    இதையடுத்து சிறைத்துறையின் சென்னை சரக டி.ஐ.ஜி. முருகேசன், கண்காணிப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் புழல் ஜெயிலில் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளில் நேற்று மீண்டும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    கோப்புப்படம்

    நேற்று மாலை 5.45 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இரவு 9.45 மணி வரை சுமார் 4 மணி நேரம் நீடித்தது.

    இந்த சோதனையின் போது புழல் சிறையில் இருந்து 29 டி.வி.க்கள், 18 கட்டில்கள், 27 எப்.எம். ரேடியோக்கள், 4 குக்கர்கள், பிரியாணி தயாரிக்க பயன்படுத்தப்படும் பெரிய அண்டா, கடப்பாரை கம்பி, 200 கிலோ பாசுமதி அரிசி, 100 கிலோ பொன்னி அரிசி, 80 கிலோ மைதாமாவு, 60 லிட்டர் சமையல் எண்ணை, 50 கிலோ பருப்பு வகைகள், சீரகம், கடுகு, ஜாம்பாட்டில், சோம்பு, நூடுல்ஸ், காய்கறிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இதில் பிரியாணி அண்டா சிறை வளாகத்தில் உள்ள தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதை அதிகாரிகள் கண்டறிந்து பறிமுதல் செய்தனர். மேலும் சிறை அறையில் பறிமுதல் செய்யப்பட்ட 18 கட்டில்களும் ஜெயிலில் உள்ள மருத்துவமனைக்கு சொந்தமானவை ஆகும்.

    இந்த கட்டில்களை சில அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு செல்வாக்கு மிக்க கைதிகளுக்கு வழங்கி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து 18 கட்டில்களையும் மீண்டும் சிறையில் உள்ள மருத்துவமனையிலேயே சிறைத்துறை உயர் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

    சிறை வளாகத்தில் கைதிகள் அறையில் இருந்து பொருட்கள் தொடர்ந்து கைப்பற்றப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  #PuzhalJail
    Next Story
    ×