search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்தியமங்கலம் அருகே பவானி ஆற்றில் மூழ்கி 2 வாலிபர்கள் பலி
    X

    சத்தியமங்கலம் அருகே பவானி ஆற்றில் மூழ்கி 2 வாலிபர்கள் பலி

    சத்தியமங்கலம் அருகே பவானி ஆற்றங்கரையோரம் குளித்தபோது நீரில் மூழ்கி 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.
    சத்தியமங்கலம்:

    திருப்பூர் 15 வேலம்பாளையத்தை சேர்ந்த கனகராஜ் என்பவரது மகன் ஆனந்த் (வயது 18). ராக்கியாபாளையம் பகுதியை சேர்ந்த மோகன் என்பவரது மகன் எபின் (23). இவர்கள் 2 பேரும் அந்த பகுதியில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர்.

    நேற்று முன்தினம் இவர்கள் மோட்டார் சைக்கிளில் சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் கொண்டமுத்தனூர் கிராமத்தை ஒட்டியுள்ள பவானி ஆற்றங்கரைக்கு வந்தனர்.

    அவர்களுடன் நண்பரான அலெக்ஸ் என்பவரும் வந்திருந்தார். ஆனந்தும், எபினும் ஆற்றில் இறங்கி குளித்தனர். அலெக்ஸ் ஆற்றங்கரையில் நின்றார்.

    குளித்துக்கொண்டிருந்த ஆனந்தும், எபினும் ஆற்றின் ஆழமாக பகுதிக்கு சென்றனர். இதனால் அவர்கள் ஆற்று நீரில் மூழ்கினர். இதை பார்த்த அலெக்ஸ் அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்துக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் ஆற்றில் இறங்கி 2 வாலிபர்களையும் தேடினர். நேற்று பகலில் நடந்த இந்த தேடுதல் பணியில் அந்த பகுதி மீனவர்களும் ஈடுபட்டனர்.

    நேற்று மாலை வரை தேடியும் 2 வாலிபர்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இரவு நேரமானதால் நேற்று தேடும் பணி நிறத்தப்பட்டது.

    இன்று காலை மீண்டும் தேடும் பணி தொடங்கியது. தீயணைப்பு வீரர்களும், மீனவர்களும் ஆற்றில் இறங்கி தேடினர். அப்போது ஆற்றில் மூழ்கிய ஆனந்த் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடல் அவர் ஆற்றில் மூழ்கிய இடத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செம்படாம்பாளையம் பிரிவில் ஆற்றில் மிதந்தது.

    உடலை பார்த்து ஆனந்தின் உறவினர்கள் கதறி அழுததை பார்க்க பரிதாபமாக இருந்தது. ஆற்றில் மூழ்கிய இன்னொரு வாலிபரான எபினும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அவரது உடலை தேடும் பணி தீவிரமாக நடந்த வருகிறது.
    Next Story
    ×