search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருவேப்பிலங்குறிச்சி அருகே சேறும்-சகதியுமான சாலையில் மாணவர்கள் நாற்று நட்டனர்
    X

    கருவேப்பிலங்குறிச்சி அருகே சேறும்-சகதியுமான சாலையில் மாணவர்கள் நாற்று நட்டனர்

    விருத்தாசலம் அருகே உள்ள கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் சேறும்- சகதியுமான சாலையில் மாணவ, மாணவிகள் நாற்று நட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் சி.கீரனூர்- பவளங்குடி செல்லும் சாலை உள்ளது.

    இந்த சாலை முற்றிலும் சேதம் அடைந்து குண்டும்- குழியுமாக காட்சி அளித்தது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்துக்குள்ளானார்கள்.

    எனவே இந்த சாலையை சீரமைக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அந்த பகுதி பொதுமக்கள் பலமுறை மனு கொடுத்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த சாலையின் ஓரம் உள்ள மணலை எடுத்து ஊழியர்கள் சாலையில் போட்டு குண்டும்- குழியுமாக இருந்த இடத்தை மூடினர்.

    ஆனால், அதன் பின்னர் பெய்த மழையால் அந்த சாலை மீண்டும் குண்டும்-குழியுமாக மாறியது. மேலும் நேற்று இரவு பெய்த மழையால் அந்த சாலை சேறும்-சகதியுமாக காட்சி அளித்தது. இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உருவானது.

    இந்த நிலையில் இன்று காலை அந்த சாலை வழியாக நேருக்கு நேர் வந்த தனியார் பஸ்சும், லாரியும் சேற்றில் சிக்கி கொண்டது. இதனால் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. காலை நேரம் என்பதால் பள்ளி-கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைகளுக்கு செல்லும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அங்கு ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் அந்த சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது இந்த சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து கோ‌ஷங்களையும் எழுப்பினர்.

    இது குறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் சாலை ஆய்வாளர் விமலா ராணி, உதவி கோட்ட பொறியாளர் நல்லத் தம்பி மற்றும் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து பொது மக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது சி.கீரனூர்- பவளங்குடி செல்லும் சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கூறினர்.

    இந்த பிரச்சனை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×