search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2 நாட்கள் சிகிச்சை முடிந்து திருமாவளவன் இன்று வீடு திரும்புகிறார்
    X

    2 நாட்கள் சிகிச்சை முடிந்து திருமாவளவன் இன்று வீடு திரும்புகிறார்

    சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருமாவளவன் 2 நாட்கள் சிகிச்சை முடிந்து இன்று மாலை வீடு திரும்புகிறார். #VCK #Thirumavalavan
    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று முன்தினம் விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கார் மூலம் சென்ற அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் அடுத்தடுத்து கலந்து கொண்டார்.

    மேலும் பயணத்தின் போது சாப்பிட்ட உணவும் ஏற்றுக் கொள்ளாமல் வயிறு கோளாறு ஏற்பட்டது. ஆனாலும் அவர் தொடர்ந்து தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று கோவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.

    மலை உச்சியில் இருந்த அந்த கோவிலுக்கு 80 படிக்கட்டுகளில் திருமாவளவன் ஏறிச் சென்றார். அப்போது தலைச் சுற்றல் ஏற்பட்டு மயங்கினார். உடனடியாக அங்கு முதல் கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.

    ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு அனுமதிக்கப்பட்டார்.

    அவருக்கு ரத்த அழுத்தம் குறைவாக இருந்ததால் உடல் சோர்வுடன் காணப்பட்டார். உடனடியாக ‘குளுக்கோஸ்’ ஏற்றப்பட்டது.

    பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் குடல் புண்ணாக இருந்தது. இதனால் அவருக்கு நேற்று வரை லேசான வயிறு வலியும் இருந்தது.

    ஆனால் தொடர்ந்து மருத்துவர்கள் அளித்த சிகிச்சைக்கு பிறகு இன்று அவரது உடல் நிலை தேறி வருகிறது. திருமாவளவனை டாக்டர்கள் நன்கு ஓய்வு எடுக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்கள்.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திருமாவளவனிடம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி உள்ளிட்ட கட்சி தலைவர்கள் டெலிபோன் மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்கள்.


    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேரில் சென்று திருமாவளவனை பார்த்தார்.

    திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆஸ்பத்திரியில் குவிந்தனர். மருத்துவமனைக்குள் தொண்டர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஒரு சில மாநில நிர்வாகிகள் மட்டும் அவர் சிகிச்சை பெறும் பகுதியில் நின்றனர்.

    டாக்டர்களின் ஆலோசனைப்படி திருமாவளவன் இன்று மாலை வீடு திரும்புகிறார். வேளச்சேரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஓய்வு எடுக்க இருப்பதால் தொண்டர்கள் யாரும் தன்னை சந்திக்க வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். #VCK #Thirumavalavan
    Next Story
    ×