search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹெல்மெட் புதிய சட்டத்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு - சமூக வலைத்தளங்களில் கண்டனம்
    X

    ஹெல்மெட் புதிய சட்டத்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு - சமூக வலைத்தளங்களில் கண்டனம்

    இரு சக்கர வாகனத்தில் பின்னால் உட்கார்ந்து இருப்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவு வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளம்பியுள்ளது. #helmet
    சென்னை:

    தமிழகம் முழுவதும் இரு சக்கர வாகனம் ஓட்டுவோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என சட்டம் உள்ளது. இதை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

    இந்த நிலையில் பின்னால் உட்கார்ந்து இருப்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து போக்குவரத்து போலீசார் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களை பிடித்து அபராதம் வசூலித்து வருகிறார்கள்.

    கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவுக்கு வாகன ஓட்டிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கூறுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து தனியார் நிறுவன ஊழியர் சுரேஷ் கூறியதாவது:-

    ஹெல்மெட் அணியாததால் காலை விபத்துகளில் உயிரிழப்பு ஏற்படுவதாக அரசு கூறுகிறது. உயிர் மீது அக்கறை கொள்வது நல்ல வி‌ஷயம் தான். ஆனால் சாலையில் குண்டும் குழியுமாக இருப்பது தான் விபத்துக்கு காரணம். போக்குவரத்து விதிகளை சரியாக கடைபிடிப்பது இல்லை.

    முதலில் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரும்பாலான சிக்னல்களில் போக்குவரத்து போலீசார் இல்லை. எழும்பூர் நாயர் பாலம் சாலையில் இருந்து பூந்தமல்லி சாலை இணையும் இடத்திலும் புரசைவாக்கம் லாடர்ஸ் செட்டில் இருந்து மோட்சம் தியேட்டர் வரையிலும் சாதாரண நேரத்தில் கூட போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

    சாலைகள், பிளாட்பாரங்கள் ஆக்கிரமிப்புகளால் தான் வாகன நெரிசல் ஏற்பட்டு விபத்து ஏற்படுகிறது. விபத்துக்கு மூல காரணமே இது தான். அதை சீர் செய்யாமல் ஹெல்மெட்டில் கெடுபிடி காட்டுவது மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படுகிறது.

    பெண்கள், குழந்தைகளுடன் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது எப்படி அனைவரும் ஹெல்மெட் அணிய முடியும். பெண்களுக்கு அசவுகரியம் ஏற்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வங்கி ஊழியர் நந்தினி கூறும்போது, செல்போனில் பேசிக்கொண்டும், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களாலும் தான் விபத்து ஏற்படுகிறது. பிளாட்பாரம் ஆக்கிரமிப்பு, மோசமான சாலைகளால் ஹெல்மெட் அணிந்தால் கூட உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்றார்.

    கட்டாய ஹெல்மெட் உத்தரவை எதிர்த்து மதுரை உள்பட சில இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இணைய தளத்திலும் கண்டனம் தெரிவித்தும், கேலி-கிண்டல் செய்தும் வறுத்தெடுக்கிறார்கள்.

    Next Story
    ×