search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் அருகே அடுத்தடுத்த வீடுகளில் புகுந்த முகமூடி கொள்ளையர்கள்
    X

    திண்டுக்கல் அருகே அடுத்தடுத்த வீடுகளில் புகுந்த முகமூடி கொள்ளையர்கள்

    திண்டுக்கல் அருகே அடுத்தடுத்த வீடுகளில் புகுந்த முகமூடி கொள்ளையர்கள் நகை பறித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகில் உள்ள முள்ளிப்பாடி ஏழுமலையான் நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது48). கார்பண்டர் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மனைவி ராஜலட்சுமி மற்றும் குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.

    இன்று அதிகாலை 3 மணி அளவில் ஒரு மர்ம நபர் இவரது வீட்டிற்குள் நைசாக உள்ளே நுழைந்தார். ராஜலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு செல்ல முயன்றபோது அவர் திடுக்கிட்டு எழுந்தார். உடனே அவனை பிடிப்பதற்காக எழுந்து ஓடினார்.

    தனது மனைவி ஓடுவதை பார்த்து கணவரும் பின்னால் ஓடினார். ஆனால் வாசலில் நின்றிருந்த மற்றொரு ஆசாமி அவர்கள் மீது கல்லை தூக்கி போட வந்ததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்து வீட்டிற்குள் சென்று விட்டனர். அப்போது அவர்கள் 2 பேரும் மின்னல் வேகத்தில் மறைந்து விட்டனர்.

    கொள்ளையடித்த நபர்கள் 20 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களாக இருந்ததாக பழனிச்சாமி தெரிவித்தார்.

    மேலும் இங்கு கொள்ளையடிப்பதற்கு முன்பாக தாமரைப் பாடியிலும் ஒரு வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால் அந்த வீட்டில் நகை, பணம் எதுவும் சிக்காததால் அக்கும்பல் தப்பி ஓடியது.

    கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு செம்பட்டி அருகே தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த தம்பதியை தாக்கி முகமூடி கொள்ளையர் பணம் பறித்து சென்றனர்.

    எனவே அதை போன்ற முறையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதால் அதே நபர்கள் இக்கொள்ளையில் ஈடுபட்டனரா? என்று திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×