search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணாநிதி மரணம்: தி.மு.க. தொண்டர்கள் 34 பேர் அதிர்ச்சியில் இறப்பு - 3 பேர் தற்கொலை
    X

    கருணாநிதி மரணம்: தி.மு.க. தொண்டர்கள் 34 பேர் அதிர்ச்சியில் இறப்பு - 3 பேர் தற்கொலை

    கருணாநிதி மரணம் அடைந்த அதிர்ச்சியில் தி.மு.க. தொண்டர்கள் 34 பேர் உயிர் இழந்தனர். மேலும் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். #Karunanidhi #DMK
    பெரியபாளையம்:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் மாலை மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது உடலை சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி பின்புறம் அடக்கம் செய்ய அனுமதி கோரப்பட்டது. ஆனால் தமிழக அரசு அதனை மறுத்துவிட்டது.

    இந்த செய்தியை கேட்டு திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள திருநிலை கிராமத்தை சேர்ந்த தி.மு.க. உறுப்பினரான ராஜ் (வயது 32) மிகுந்த வருத்தத்தில் இருந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த ராஜ், நேற்று காலை திருநிலை கிராமத்தில் உள்ள ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதற்கிடையே, அண்ணா சமாதி பின்புறம் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.



    தேனி மாவட்டம் போடி ராசிங்காபுரத்தை சேர்ந்த தி.மு.க. தொண்டரான முருகேசன் (45) கருணாநிதி மரணம் குறித்த செய்தியை கேட்டதும் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கினார். மீளா துயரத்தில் இருந்த அவர் நேற்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சேலம் மாவட்டம் எடப்பாடி கொங்கணாபுரத்தை அடுத்த எலவம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜா என்ற வெள்ளகுட்டி (45). தி.மு.க. உறுப்பினர். கருணாநிதி இறந்ததை அறிந்த ராஜா துக்கம் தாங்காமல் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே உள்ள புறா கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் உலகநாதன் (47), மயிலாடுதுறை அருகே உள்ள பண்டாரவடை நெய்குப்பை கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (70), மயிலாடுதுறையை அடுத்த பெரம்பூர் கீழத்தெருவை சேர்ந்த நாதஸ்வர வித்வானான ராஜேந்திரன் (50), மயிலாடுதுறை மேலபெரம்பூர் கிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தி (56), மணல்மேடு அருகே உள்ள கொற்கை கிராமத்தை சேர்ந்த நாகராஜ் (70) ஆகிய தி.மு.க. தொண்டர்கள் கருணாநிதி இறந்த செய்தி கேட்டு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்தனர்.

    அதே போல் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா கீழ்புதுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த வரதன் (74), புளியரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சுசீலா (60) மற்றும் ஆரணி அம்பேத்கர் நகரை சேர்ந்த பெருமாள் மனைவி பாப்பாம்மாள் (57) ஆகியோர் கருணாநிதி இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியில் உயிர் இழந்தனர்.

    வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியத்தை சேர்ந்த மேல்வல்லம் கிராமத்தை சேர்ந்த கார்த்திகேயன் (65), நேற்று முன்தினம் மாலை கருணாநிதி இறந்த செய்தியை தொலைகாட்சியில் பார்த்துக்கொண்டிருந்தபோது அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

    திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 34-வது வார்டு குருநகரை சேர்ந்த தி.மு.க. உறுப்பினர் சுப்பம்மாள் (60), வத்தலக்குண்டு அருகே உள்ள விராலிபட்டியை அடுத்த குரும்பட்டியை சேர்ந்த தி.மு.க. தொண்டரான கருப்பையா (55) ஆகியோர் கருணாநிதி இறந்த செய்தியை கேட்ட அதிர்ச்சியால் நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்தனர்.

    தேனி மாவட்டம் தேவாரம் மெயின்பஜார் தெருவை சேர்ந்த சுலைமான் (65), போடியை சேர்ந்த தி.மு.க. தொண்டர் கோவிந்தன் (55) ஆகிய இருவரும் கருணாநிதி இறந்த செய்தியை தொலைக்காட்சியில் பார்த்து மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்தனர்.

    விழுப்புரம் முத்தோப்பு வார்டு தி.மு.க. பிரதிநிதியான பன்னீர்செல்வம் (59) திருக்கோவிலூர் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகரான குமரவேல் ஆகிய 2 பேரும் கருணாநிதி இறந்த செய்தியை தொலைக்காட்சியில் பார்த்து அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தனர்.

    அதேபோல் உளுந்தூர்பேட்டை கிழக்கு ஒன்றிய தி.மு.க. மகளிரணி நிர்வாகியான பூவாடு கிராமத்தை சேர்ந்த பெருமா (60) என்பவர் நேற்று முன்தினம் மாலை கருணாநிதி உயிர் இழந்த செய்தியை தொலைக்காட்சியில் பார்த்து மயங்கி விழுந்து இறந்தார்.

    சேலம் தென்அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (45). தி.மு.க. தொண்டரான இவர் அழகாபுரம் பஸ் நிறுத்தம் பகுதியில் கருணாநிதி உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தியபோது, திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.

    எடப்பாடி கக்சுபள்ளியை சேர்ந்த லட்சுமணன் (55), பூலாம்பட்டி சந்தை பேட்டையை சேர்ந்த தி.மு.க. தொண்டரான வெங்கடாசலம் (60) ஆகியோர் கருணாநிதி இறந்த செய்தியை கேட்டு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கங்கதேவனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சிக்கதாய்ப்பா (80) கருணாநிதி மறைவு செய்தி அறிந்ததும் அதிர்ச்சியில், மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

    தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள சவுளுபட்டி கொட்டாவூரை சேர்ந்த சண்முகம் (55) கருணாநிதி மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டதும் மயங்கி விழுந்து இறந்தார்.

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள வடக்கு பொன்னன்விடுதி கிராமத்தை சேர்ந்தவர் சின்னையா (65), தி.மு.க. கிளை உறுப்பினராக இருந்தார். நேற்று முன்தினம் கருணாநிதி மரணம் அடைந்தார் என்ற செய்தியை தொலைக்காட்சியில் பார்த்து கொண்டிருந்த சின்னையா அதிர்ச்சியில் மயங்கி விழுந்து இறந்தார்.

    கீரனூர் அருகே உள்ள இளையாவயல் கிராமத்தை சேர்ந்த தி.மு.க. உறுப்பினரான ராமன் (50), திருவரங்குளம் பாரதியார் நகரை சேர்ந்த பழனியம்மாள் (75) ஆகிய இருவரும் கருணாநிதி இறந்த செய்தியை தொலைக்காட்சியில் பார்த்து அதிர்ச்சியில் மயங்கி விழுந்து உயிர் இழந்தனர்.

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகா நத்தக்காடையூர் அருகே உள்ள புதுவெள்ளியம்பாளையத்தை சேர்ந்த குருசாமி (55) காங்கேயம் வடக்கு ஒன்றியம் நத்தக்காடையூர் ஊராட்சி 5-வது வார்டு தி.மு.க. செயற்குழு உறுப்பினராக இருந்தார். இவர் நேற்று முன்தினம் கருணாநிதி இறந்த செய்தியை கேட்டு, கவலையுடன் தூங்க சென்றார். நேற்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு தூக்கத்திலேயே அவர் இறந்தார்.

    நெல்லை டவுனை சேர்ந்த குருநாதன் என்ற குருசாமி (49), நெல்லை மாவட்டம் பனவடலிசத்திரம் அருகே உள்ள மருக்காலங்குளத்தை சேர்ந்த சண்முகையா (68), அதே ஊரை சேர்ந்த வேலுசாமி (68) ஆகிய தி.மு.க. தொண்டர்கள் கருணாநிதி இறந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்து மயங்கி விழுந்து இறந்தனர்.

    மதுரையை சேர்ந்தவர் அழகுராஜா (27), மதுரை கருப்பாயூரணி பகுதியை சேர்ந்த நாகராஜ் (34), அலங்காநல்லூரை அடுத்த மாணிக்கம்பட்டியை சேர்ந்தவர் சின்னச்சாமி (63), எர்ரம்பட்டியை சேர்ந்த அலங்கார கவுண்டர் (65), மதுரை பெருங்குடியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் கணபதியின் மனைவி சந்திரா (52) ஆகிய தி.மு.க. தொண்டர்கள் கருணாநிதி இறந்த தகவலை கேட்டு அதிர்ச்சியில் இறந்தனர்.

    குமரி மாவட்டம் திக்கணங்கோடு ஊராட்சி 17-வது வார்டு செயலாளராக இருந்தவர் அலெக்சாண்டர் (66). தி.மு.க.வின் தீவிர தொண்டரான இவர் நேற்று முன்தினம் மாலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்த செய்தியை கேட்டு மயங்கி விழுந்து இறந்தார். 
    Next Story
    ×