என் மலர்
செய்திகள்

ஈரோடு அருகே கந்துவட்டி கொடுமையால் லாரி உரிமையாளர் தற்கொலை
ஈரோடு:
ஈரோடு சோலார் அடுத்த நகராட்சிநகரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 38). இவரது மனைவி பெயர் சித்ரா. 2 குழந்தைகள் உள்ளனர்.
தட்சிணாமூர்த்தி 2 லாரிகள் வைத்து மணல் விற்பனை செய்து வந்தார். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் ரூ. 5 லட்சம் கடன் பெற்று லாரிகளை வாங்கினார்.
இதற்காக மாதாமாதம் வட்டி பணம் செலுத்திக் கொண்டு வந்தார். இந்த நிலையில் தொழிலில் நலிவு ஏற்பட்டதால் கஷ்டப்பட்டார். வட்டி பணத்தை கூட அவரால் செலுத்த முடிய வில்லை.
உரிய காலத்தில் வட்டி கொடுக்காததால் வட்டிக்கு மேல் கந்து வட்டியும் கேட்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் தட்சிணாமூர்த்தி மிகுந்த மன உளைச்சலில் காணப்பட்டார்.
இந்த நிலையில் இன்று காலை ஈரோடு சோலாரில் உள்ள லாரி உரிமையாளர்கள் சங்க அலுவலகத்துக்கு தட்சிணா மூர்த்தி வந்தார். அங்கு இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது.
இந்த பேச்சுவார்த்தையில் அவருக்கு சாதகமான எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் அவர் மேலும் மன வேதனை அடைந்தார்.
இந்த நிலையில் அனைவரும் சென்ற பிறகு லாரி உரிமையாளர்கள் சங்க அலுவலகத்திலேயே லாரி உரிமையாளர் தட்சிணா மூர்த்தி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண் டார்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு ஓடிவந்த அவரது மனைவி மற்றும் குழந்தைகள், உறவினர்கள் தட்சிணாமூர்த்தியின் உடலை பார்த்து கதறி அழுதனர். இது மிகவும் பரிதாப மாக இருந்தது.
இந்த சம்பவம் குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






