search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கம்பம் அருகே போலீஸ்காரர் வீட்டு முன் 2-வது மனைவி தர்ணா
    X

    கம்பம் அருகே போலீஸ்காரர் வீட்டு முன் 2-வது மனைவி தர்ணா

    போலீஸ்காரர் வீட்டு முன் 2-வது மனைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கூடலூரைச் சேர்ந்தவர் அஜ்மல்கான். இவர் கூடலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக உள்ளார்.

    இவர் முதல் மனைவியை விவாகரத்து செய்து கடந்த 2001-ம் ஆண்டு பரகத் நிஷா என்பவரை 2-வது திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர்.

    இது தொடர்பான வழக்கு உத்தமபாளையம் மகளிர் போலீசில் நிலுவையில் உள்ளது.

    இதனிடையே கடந்த ஆண்டு அஜ்மல்கான் கெங்குவார்பட்டியைச் சேர்ந்த சர்க்கரையம்மாள் என்பவரை 3-வது திருமணம் செய்து கூடலூரில் வசித்து வருகிறார். இந்த விபரம் 2-வது மனைவி பரகத் நிஷாவுக்கு தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அவர் கூடலூர் வந்தார்.

    அங்கு கணவர் வீட்டு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் செய்து வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில் முறைப்படி விவாகரத்து பெறாமல் 3-வது திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை இந்த இடத்தை விட்டு நகரமாட்டேன் என்று ஆவேசமாக கூறினார்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×