search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி அருகே வாலிபர் பிணமாக கிடந்த வழக்கில் திருப்பம்- 2 பேர் கைது
    X

    திருச்சி அருகே வாலிபர் பிணமாக கிடந்த வழக்கில் திருப்பம்- 2 பேர் கைது

    திருச்சி அருகே மருமகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த வாலிபரை கொலை செய்த தாய்மாமன் மற்றும் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    திருச்சி:

    திருச்சி எடமலைப்பட்டி புதூர் அருகே பஞ்சப்பூர் பூங்கா எதிரே உள்ள முட்புதரில் கடந்த திங்கட்கிழமை வாலிபர் ஒருவர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

    துணை போலீஸ் கமி‌ஷனர் நிஷா, உதவி போலீஸ் கமி‌ஷனர் சிகாமணி, இன்ஸ்பெக்டர் உதயச்சந்திரன் மற்றும் போலீசார் பிணத்தை கைப்பற்றி கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? அவரை கொலை செய்தவர்கள் யார்? என விசாரணை நடத்தினர்.

    அப்போது கொலை செய்யப்பட்டவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தகரம் புதுகிராமத்தைச் சேர்ந்த இருதயராஜ் மகன் சூரிய பிரகாஷ் (வயது 21) எனத் தெரியவந்தது. கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த சூரியபிரகாசை அவரது தாய்மாமன் கோவில்பட்டி குளத்தூரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தனது மகன்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து தீர்த்து கட்டியது தெரியவந்தது.

    ஆறுமுகத்தின் தங்கை துர்க்கையம்மாள் மகனான சூரியபிரகாஷ் அடிதடி, வழிப்பறி போன்ற சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டு சிறைக்கு சென்று வந்துள்ளார். தன்னை ரவுடி போல காட்டிக் கொண்டு வந்துள்ளார்.

    இந்த நிலையில் ஆறுமுகத்தின் மகன் ஆனந்தின் மனைவிக்கு சூரியபிரகாஷ் செல்போனில் ஆபாச படங்கள் அனுப்புவது, ஆபாசமாக பேசுவது என செக்ஸ் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக சூரியபிரகாசை உறவினர்கள் தட்டிக்கேட்ட போது தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் கடந்த ஞயிற்றுக்கிழமை தாய்மாமன் ஆறுமுகத்தை சூரிய பிரகாஷ் அடித்துள்ளார். இதை தட்டிக் கேட்ட அவரது மகன்கள் ஆனந்த், மணிகண்டன் ஆகியோரையும் தாக்கியுள்ளார்.

    இதனால் ஆறுமுகம் அவமானம் அடைந்தார். அவரது மகன்களும் சூர்யபிரகாஷ் மீது கோபம் அடைந்தனர். தொடர்ந்து தொல்லை கொடுப்பதால் அவரை தீர்த்துக்கட்டுவது என முடிவு செய்துள்ளனர்.

    ஞாயிற்றுக்கிழமை சூர்யபிரகாசிடம் பெரம்பலூருக்கு செல்லலாம் என காரில் அழைத்து வந்தனர். வழியில் சூர்யபிரகாசிற்கு அதிக அளவு மது வாங்கி கொடுத்தனர்.

    அவர் போதையில் இருந்த போது காருக்குள்ளேயே அவரது கழுத்தை நெரித்தனர். இதில் அவர் மயங்கினார். அதன் பிறகு அவரது உடலில் அரிவாளால் வயிறு, மார்பு உள்ளிட்ட 7 இடங்களில் சரமாரியாக வெட்டினர். ஆத்திரம் தீர வெட்டி முடித்ததும் சூர்ய பிரகாஷ் இறந்ததை உறுதி செய்தனர்.

    அதன் பிறகு காரில் திருச்சியை நோக்கி வந்தனர். பஞ்சப்பூர் அருகே வந்தபோது திருச்சி மாநகருக்குள் நுழைந்தால் சோதனை சாவடியில் போலீசார் பிணத்தை பார்த்து விடுவார்கள் என்பதால் பஞ்சப்பூர் முட்புதருக்குள் உடலை வீசி விட்டு தப்பியுள்ளனர்.

    இந்த தகவல் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதை தொடர்ந்து தாய் மாமன் ஆறுமுகம், மற்றும் கார் டிரைவர் பெரம்பலூரைச் சேர்ந்த பிரகாஷ் ஆகியோரை கைது செய்தனர்.

    இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் ஆறுமுகத்தின் மகன்கள் ஆனந்த், மணிகண்டன் மற்றும் ரவிக்குமார், செந்தாமரைக் கண்ணன் ஆகியோர் நேற்று கடலூர் கோர்ட்டில் சரணடைந்தனர்.

    ஆறுமுகத்தையும் டிரைவர் பிரகாசையும் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் அவர்களை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். கடலூர் கோர்ட்டில் சரணடைந்த 4 பேரும் கடலூர் கோர்ட்டில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக திங்கட்கிழமை கோர்ட்டில் மனு செய்யவுள்ளனர். #tamilnews
    Next Story
    ×