search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் அருகே குடிபோதையில் பாலத்தில் இருந்து விழுந்த எஸ்.ஐ. பலி
    X

    திண்டுக்கல் அருகே குடிபோதையில் பாலத்தில் இருந்து விழுந்த எஸ்.ஐ. பலி

    திண்டுக்கல் அருகே குடிபோதையில் பாலத்தில் இருந்து தவறி விழுந்த சப்-இன்ஸ்பெக்டர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல், ஜூலை. 12-

    திண்டுக்கல் அருகே குடிபோதையில் பாலத் தில் இருந்து தவறி விழுந்த சப்-இன்ஸ்பெக்டர் பரிதா பமாக உயிரிழந்தார்.

    திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 50). இவர் ஆயுதப்படை போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். தனது மனைவி ஜெயக்கொடி (46), விஜயபாண்டி (24), மகள் சிவானிகா (20) ஆகியோருடன் சீலப்பாடி ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார்.

    இவருக்கு சொந்தமான தோட்டம் கல்லாடிப்பட்டி என்ற இடத்தில் உள்ளது. தோட்டத்துக்கு சென்று விட்டு ஊர் திருவிழாவை காண்பதற்காக நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

    திண்டுக்கல் அருகே உள்ள அணைப்பட்டி பிரிவு ரோட்டில் கல்பாலத்தின் மீது அமர்ந்து மது அருந்தினார். போதை தலைக்கேறிய நிலையில் பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

    10 அடி உயரத்தில் இருந்து விழுந்த முருகேசன் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இன்று காலை அப்பகுதியில் வந்த பொதுமக்கள் மோட்டார் சைக்கிள் மட்டும் தனியாக இருந்ததைப்பார்த்து பாலத்தின் கீழே எட்டிப் பார்த்தனர். அப்போது முருகேசன் தலையில் அடிபட்ட நிலையில் இறந்து கிடந்ததைப்பார்த்ததும் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×