search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைத்தறி தொழிலுக்கு சரக்கு சேவை வரி விலக்கு - மத்திய மந்திரியிடம், தமிழக அமைச்சர் கோரிக்கை
    X

    கைத்தறி தொழிலுக்கு சரக்கு சேவை வரி விலக்கு - மத்திய மந்திரியிடம், தமிழக அமைச்சர் கோரிக்கை

    கைத்தறி தொழிலுக்கு சரக்கு சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய ஜவுளித்துறை மந்திரி ஸ்மிரிதி இரானியிடம் தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கோரிக்கை வைத்தார்.
    சென்னை:

    மத்திய அரசின் ஜவுளித்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கைத்தறி ஏற்றுமதி மேம்பாடு கவுன்சில் சார்பில் தேசிய அளவில் 2014-15 மற்றும் 2015-16 ஆகிய ஆண்டுகளுக்கான 28-வது ‘கைத்தறி ஏற்றுமதியாளர்கள் விருது’ வழங்கும் விழா சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைபெற்றது.

    விழாவுக்கு கைத்தறி ஏற்றுமதி மேம்பாடு கவுன்சில் தலைவர் கே.என்.பிரபு தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக மத்திய ஜவுளித்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி, தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் சிறந்த முறையில் கைத்தறி ஆடைகளை ஏற்றுமதி செய்த நிறுவனங்களுக்கு மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார். அரியானா மாநிலத்தை சேர்ந்த நிறுவனங்கள் அதிக விருதை தட்டிச் சென்றன. தமிழகத்தில் கரூர், கோவையை சேர்ந்த நிறுவனங்கள் விருது பெற்றன.


    விழாவில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் பேசும்போது, ‘ ஜவுளித்துறையில் கைத்தறி பிரிவுக்கு சரக்கு மற்றும் சேவை வரியில்(ஜி.எஸ்.டி.) இருந்து விலக்கு அளிக்க வேண்டும். விற்பனை ஊக்குவிப்பு திட்டத்தின் உச்சவரம்பை நீக்க வேண்டும்’ என்று மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானிக்கு கோரிக்கை விடுத்தார்.

    பின்னர் மத்திய மந்திரி ஸ்மிரிதி ராணி பேசும்போது, ‘இந்தியாவில் சாதாரண நெசவாளர்களின் மாத வருமானம் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை தான் இருக்கும். எனவே மாதம் ரூ.20 லட்சத்துக்கு குறைவான வருமானம் உள்ளவர்கள் சரக்கு சேவை வரியை செலுத்த தேவை இல்லை என்று ஜி.எஸ்.டி. கவுன்சில் தெளிவாக கூறி உள்ளது. இதனால் சிறு, குறு, நெசவாளர்கள் ஜி.எஸ்.டி.யை பற்றி கவலைப்பட தேவை இல்லை. இந்த கருத்தை நாம் அனைவரிடமும் எடுத்து செல்ல வேண்டும்’ என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியனுக்கு பதில் அளித்தார்.

    நிகழ்ச்சி முடிந்தவுடன் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சந்தித்து, 6 பக்கங்கள் அடங்கிய கோரிக்கை மனுவை அளித்தார்.
    Next Story
    ×