search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமல்ஹாசன் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் 12-ந்தேதி அறிவிக்க முடிவு
    X

    கமல்ஹாசன் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் 12-ந்தேதி அறிவிக்க முடிவு

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்து அறிவிக்க கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். வருகிற 12-ந்தேதி அந்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரியவந்துள்ளது.
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி மாதம் மதுரையில் “மக்கள் நீதி மய்யம்” எனும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார்.

    கடந்த மாதம் அவர் அந்த கட்சியை டெல்லி தலைமை தேர்தல் அலுவலகத்தில் பதிவு செய்தார். தேர்தல் கமி‌ஷனும் கமல்ஹாசனின் கட்சியை அங்கீகாரம் செய்து ஒப்புதல் அளித்துள்ளது.

    இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் பணிகளில் கமல் நற்பணி மன்ற நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதன் அடிப்படையில் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    கட்சித் தொடங்கிய 4 மாதங்கள் ஆகி விட்ட நிலையில் மாநில மற்றும் மாவட்ட அளவில் முக்கிய நிர்வாகிகள் இல்லாததால் கட்சியின் செயல்பாடுகளில் தேக்க நிலை உருவாகி இருப்பதாக அதிருப்தி எழுந்தது. அதோடு கட்சியில் மேல் மட்டத்துக்கும் கீழ் மட்டத்துக்கும் தொடர்பு இல்லாத நிலை இருப்பதாகவும் கூறப்பட்டது.

    இதையடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்து அறிவிக்க கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். வருகிற 12-ந்தேதி (வியாழக்கிழமை) அமாவாசை தினத்தன்று அந்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரியவந்துள்ளது.

    இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினர் ஒருவர் கூறியதாவது:-

    மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அடிமட்டம் வரை வலுவான தொண்டர்கள் உள்ளனர். ஆனால் அந்த தொண்டர்களுக்கும் கட்சி தலைமைக்கும் முறையான இணைப்பு இல்லை என்று பேச்சு நிலவுகிறது. ஆனால் அதில் எந்த உண்மையும் இல்லை.

    மேலும் கட்சியின் அனைத்து முடிவுகளையும் கமல்ஹாசன் மட்டுமே எடுப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது. கட்சியில் யாருக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை என்றும் கதை கதையாக பேசப்படுகிறது. இந்த கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய நிர்வாகிகள் நியமனம் அமையும்.

    கமல்ஹாசனை பொறுத்த வரை மக்கள் நீதி மய்யம் கட்சியை மிக, மிக வலுவான உள்கட்டமைப்புடன் அமைக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் தன்னை தனிப்பட்ட முறையில் அதில் ஈடுபடுத்தியுள்ளார். அதோடு ஆலோசனைகள் பெற 3 குழுக்களையும் வைத்துள்ளார்.

    சென்னை, பெங்களூரு, அமெரிக்கா ஆகிய மூன்று இடங்களில் அந்த குழுக்கள் செயல்படுகிறது. அந்த குழுவினருடன் கமல்ஹாசன் அடிக்கடி ஆலோசனை செய்து வருகிறார். அதன் அடிப்படையில் முதல் கட்டமாக 12-ந்தேதி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

    இந்த நியமனம் கட்சி தொண்டர்கள் மத்தியில் நிச்சயம் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அது மட்டுமின்றி கட்சியில் புதிய வேகத்துடன் செயல்பட நிர்வாகிகள் நியமனம் கை கொடுப்பதாக அமையும். எனவே கமலின் அறிவிப்பை தொண்டர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

    புதிய நிர்வாகிகள் அறிவிப்பு வெளியாகும் 12-ந்தேதி அன்று கட்சி அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்து பேசவும் கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். அன்று அவர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடியையும் ஏற்றி வைப்பார். அந்த கட்சி கொடிக்கு தலைமை தேர்தல் கமி‌ஷன் அங்கீகாரம் கொடுத்துள்ளது.

    மக்கள் நீதி மய்யம் மேல் மட்டத்தில் மட்டும் இயங்குவதாக ஒரு கருத்து பரவி உள்ளது. 12-ந்தேதி அதற்கு விடை கிடைக்கும். கடை கோடியில் உள்ள தொண்டனிடமும் கமல்ஹாசன் காது கொடுத்து கேட்டு கருத்துக்களை பகிர்ந்து வருவார் என்பது தெரியவரும்.

    நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்ட பிறகு கட்சி புதிய எழுச்சி பெறும்.

    இவ்வாறு அந்த செயற்குழு உறுப்பினர் கூறினார். #MakkalNeedhiMaiam
    Next Story
    ×