search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னர் கிரண்பேடி இனி தன்னிச்சையாக செயல்படுவதை நிறுத்திகொள்ள வேண்டும்- நாராயணசாமி
    X

    கவர்னர் கிரண்பேடி இனி தன்னிச்சையாக செயல்படுவதை நிறுத்திகொள்ள வேண்டும்- நாராயணசாமி

    கவர்னருக்கு உள்ள அதிகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட் இன்று வெளியிட்ட தீர்ப்பை ஏற்று புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி தன்னிச்சையாக செயல்படுவதை நிறுத்திகொள்ள வேண்டும் என்று முதல்வர் நாராயணசாமி அறிவுறுத்தி உள்ளார். #DelhiPowerTussle
    புதுச்சேரி:

    முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது, அது இந்திய அரசியல் அமைப்பு அமர்வு 5 நீதிபதிகள் கொண்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது, முழு தீர்ப்பை நான் படிக்கவில்லை.

    முக்கிய அம்சங்களை நான் கூற விரும்புகிறேன், புதுவைக்கு 100-க்கு 110 சதவீதம் இந்த தீர்ப்பு பொருந்தும். கவர்னர் அமைச்சரவையின் அறிவுரையின்படிதான் செயல்பட வேண்டும். அவருக்கு தனிப்பட்ட அதிகாரம் இல்லை என தொடர்ந்து 2 ஆண்டுகளாக அறிவுறுத்தி உள்ளேன். 19 முறை கடிதம் எழுதியுள்ளேன், அதிகாரிகளை அழைத்து தனியாக கூட்டம் போட அதிகாரம் இல்லை என கூறியுள்ளேன்.

    பல பகுதிகளுக்கு சென்று பார்க்க உரிமை உண்டு. ஆனால், தனியாக உத்தரவு போட அதிகாரம் இல்லை என பல பத்திரிகை பேட்டியில் கூறியுள்ளேன். கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அனைத்தையும் டெல்லிக்கு அனுப்பக் கூடாது.

    முக்கிய கொள்கை முடிவுகளை மட்டுமே அனுப்ப வேண்டும். நான் கூறிய அனைத்தும் நீதிமன்ற தீர்ப்பில் பிரதிபலித்துள்ளது. துணை நிலை ஆளுனர் மக்கள் நல திட்டங்களை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு செய்யும்போது தடையாக இருக்க கூடாது.

    கவர்னர் முட்டுக்கட்டை போட அதிகாரம் இல்லை என நான் கூறியது தீர்ப்பிலேயே வந்துள்ளது. அமைச்சரவை எடுத்த முடிவில் கை வைக்க அதிகாரம் இல்லை என நான் கூறியதை உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

    கேபினட் முடிவு அனுப்பினால் அதில் கை வைக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை. டெல்லியில் நிலம் சட்டம்-ஒழுங்கு நிர்வாகம், நிதி ஆகியவற்றில் உரிமை இல்லை. ஆனால் புதுவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருப்பதால், அனைத்து அதிகாரமும் சட்டசபைக்கு உண்டு.

    கோப்புகள் அனுப்பும் போது காரணங்கள் கூறி கோப்புகளை திருப்பி அனுப்ப அவருக்கு அதிகாரம் இல்லை. இந்திய அரசியலமைப்பு சட்டம் மிக தெளிவாக கூறியிருப்பது கவர்னருக்கு எந்த முடிவெடுக்கவும் தனி அதிகாரம் இல்லை.

    முழு அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கே உண்டு. இது சம்பந்தமாக நான் தொடர்ந்து 2 ஆண்டுகளாக கவர்னர், பிரதமர், உள்துறைக்கு கடிதம் எழுதியும் எனக்கு சரியான பதில் கூறவில்லை.

    உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்க ஒன்று. மக்களுக்கு எங்களது அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு மக்கள் எங்களை எதிர்பார்க்கிறார்கள்.


    நாங்கள் நிறைவேற்றும் போது கோப்புகளை காலம் கடத்தி நிறைவேற்ற முடியாமல் தேவையில்லா காரணங்களை சொல்லி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு உள்ள அதிகாரங்களை நியமிக்கப்பட்டவர்கள் எடுத்துக்கொள்ள கூடாது. இந்த தீர்ப்பு புதுவை மாநிலத்திற்கு பொருந்தும் என நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கவர்னர் அதிகாரிகளை அழைத்து தன்னுடைய அலுவலகத்தில் தினமும் கூட்டம் போடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அவருக்கு அதிகாரம் கிடையாது. தேவைப்பட்டால் கோப்பில் விளக்கம் வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட துறையின் செயலாளரை அழைத்து பேசலாம். அவரும்கூட சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் இது குறித்து பேச வேண்டும் என தெரிவித்துவிட்டு தான் செல்ல வேண்டும்.

    அதிகாரிகளுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்னர் இந்த உத்தரவை நான் போட்டிருக்கிறேன். யார் உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறினாலும் அவர்கள் மீது நீதிமன்றத்தில் மனு போட்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நான் தொடருவேன்.

    2 ஆண்டுகளாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உள்ள மரியாதையை குறைக்கும் வகையில் அதிகாரிகளை அழைத்து பேசி தன்னிச்சையாக செயல்பட வைத்ததை இனி நிறுத்தி கொள்வார்கள் என நினைக்கிறேன். கவர்னரை பொருத்தவரை உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

    மக்களாட்சி தத்துவத்தை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அமைச்சரவைக்கு உள்ள உரிமையில் அவர் தலையிட்டதால் தான் பிரச்சினை வந்தது. அதிகார போட்டி இதில் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார். #DelhiPowerTussle #PuducherryCM #Narayanasamy
    Next Story
    ×